”தற்கொலை வேண்டாமே ப்ளீஸ்; வாழ்ந்து காட்டுங்களேன்” - இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்!
டெல்லி: உலகம் முழுவதும் இன்று உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் நிலையில், உலக சுகாதார நிறுவனமான WHO, தற்கொலைகளைத் தடுக்க மக்கள் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
"அவரவர் பக்கத்தில் முன்னதாகவே மனரீதியான பாதிப்புகளைக் கண்டறிந்து அவற்றைக் கையாள தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், தற்கொலை செய்யும் உணர்வு ஏற்பட்டால் அது எதனால் ஏற்படுகின்றது என்ற சுய பரிசோதனை நல்லது.
நம்மை நாமே உணர்ந்து கொண்டால் மட்டுமே தற்கொலை எண்ணங்களை தடுக்க முடியும்.
தற்கொலை வேண்டாமே பிளீஸ்:
இந்த உலக தற்கொலை தடுப்பு நாளில் அனைவரும் இணைந்து தற்கொலைகளை தடுக்கின்ற முயற்சியில் வலுவாக ஈடுபட வேண்டும்" என்று டபிள்யூ.ஹெச்.ஓவின் தென்கிழக்காசிய இயக்குனரான டாக்டர் பூனம் கேத்ராபால் சிங் தெரிவித்துள்ளார்.
சமூகம் சார்ந்த பிரச்சினை:
மக்கள் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினையாகவே தற்கொலை இருக்கின்றது. மனம் மற்றும் சமூக ரீதியான குழப்பங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகளே ஒருவரை தற்கொலைக்கு தூண்டுகின்றது.
40 நொடிகளுக்கு ஒருவர்:
ஒவ்வொரு 40 நொடிகளிலும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மனிதன் தற்கொலைக்கு முயல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் கிட்டதட்ட 80 லட்சம் பேர் தற்கொலையால் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சேர்த்து காப்பாற்றப்படுகின்றனர்.
இரண்டாவது காரணம் இது:
உலகளவில் கிட்டதட்ட 15 முதல் 29 வயதிலான இளைஞர்களில் இறப்பில் இரண்டாவது காரணியாக தற்கொலை விளங்குகின்றது. மேலும், தென் கிழக்கு ஆசியாவில்தான் 39 சதவீத தற்கொலை வழக்குகள் பதிவாகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உடல் நமக்கு சொந்தமில்லை....உயிரை விடுவதால் எல்லா பிரச்சினைகளும் முடிந்து விடாது... உங்களை சுற்றி உள்ளவர்களை நேசிக்கத் தொடங்குங்கள்....உங்கள் வாழ்க்கையை நலமுடன் வாழுங்கள்!