கொதிக்கும் எழுத்தாளர்கள்.. சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுக்கும் மேலும் ஐவர்!
டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் சகிப்புத் தன்மையின்மை மற்றும் மதவாத சூழலுக்கு எதிராக கொதிப்படைந்திருக்கும் எழுத்தாளர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை வலுவாக்கி வருகின்றனர். ஏற்கனவே சிலர் சாகித்ய அகாடமி விருதைத் திருப்பித் தந்துள்ள நிலையில் மேலும் ஐந்து எழுத்தாளர்கள் தங்களது விருதுகளைத் திருப்பித் தரப் போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் கன்னட எழுத்தாளரான அரவிந்த் மலகட்டி, சாகிய் அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த எழுத்தாளர் கணேஷ் தேவி மற்றும் மேலும் நான்கு எழுத்தாளர்கள் தங்களது சாகித்ய அகாடமி விருதைத் திரும்ப வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
சேகல், வாஜ்பாயிக்கு ஆதரவாக
தேவி இதுதொடர்பாக சாகித்ய அகாடமி தலைவர் விஸ்வநாத் பிரதாப் திவாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே தங்களது விருதுகளைத் திருப்பி விட்ட நயன்தாரா சேகல், அசோக் வாஜ்பாயி மற்றும் பிற எழுத்தாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து எனது விருதைத் திரும்ப வழங்குகிறேன்.
கருத்து சுதந்திரம் இல்லை
நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை. கருத்துக்களைச் சுதந்திரமாக தெரிவிப்பதற்கான இடம் சுருங்கிப் போய் விட்டது. கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு சிலரிடம் மனம் இல்லாமல் போய் விட்டது. மாற்றுக் கருத்துக்களைப் பொறுத்துக் கொள்ள முடியாதோர் அதிகரித்து விட்டனர்.
வேற்றுமையிலும் ஒற்றுமை
வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற அபாரமான அடித்தளத்தின் மீது அமைந்ததுதான் இந்தியா. ஆனால் இன்று சகிப்புத்தன்மை குறைந்து போய் விட்டது. ஒருவர் கூறும் கருத்துக்களை சிலர் ஏற்க மறுக்கிறார்கள். குடியரசுத் தலைவர் கூட இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் அடித்தளம் தகர்ந்து போய் விடக் கூடாது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
அமன் சேத்தி
இதேபோல டெல்லியைச் சேர்ந்த எழுத்தாளர் அமன் சேத்தியும் தனது விருதைத் திரும்பத் தருவதாக கூறியுள்ளார். இவர் 1993ம் ஆண்டு விருது பெற்றவர் ஆவார்.
மேலும் 3 பேர்
இவர்கள் தவிர பஞ்சாபைச் சேர்ந்த குர்பச்சன் புல்லார், அஜ்மீர் சிங் அவுலாக், அதம்ஜித் சிங் ஆகியோரும் தங்களது விருதுகளைத் திரும்பத் தருவதாக கூறியுள்ளனர்.
சாரா ஜோசப்
ஏற்கனவே கேரளாவைச் சேர்ந்த சாரா ஜோசப் மற்றும் இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ் ஆகியோரும் தங்களது விருதுகளைத் திரும்பத் தருவதாக அறிவித்துள்ளது நினைவிருக்கலாம். கன்னட எழுத்தாளர் கல்பர்கி கொலைக்கு கண்டனம் தெரிவித்து இவர்கள் விருதுகளைத் திரும்பக் கொடுத்துள்ளனர்.