கர்நாடக பாஜக தலைவர் பதவி கோரி மோடிக்கு எதியூரப்பா கடிதம்!
பெங்களூர்: கர்நாடக பாஜக மாநிலத் தலைவராகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்து பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு அம்மாநில முன்னாள் முதல்வர் எதியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த எடியூரப்பா, நரேந்திர மோடி தலைமையில் அமையவிருக்கும் மத்திய பாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க கட்சியின் முன்னணித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளதால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்க மோடி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் பதவி மீதான ஆசையைக் கைவிட்டுள்ள எதியூரப்பா, கட்சியின் மாநிலத் தலைவர் பதவியைக் கேட்டு நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் எதியூரப்பா எழுதியுள்ளதாவது:
தகுதி வாய்ந்தத் தலைவர்களுக்கு மட்டுமே கட்சியின் தலைமைப் பொறுப்பை வழங்குவேன் என்று தாங்கள் கூறியதை வரவேற்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து, கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் பதவியைக் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன்.
மக்களின் எதிர்ப்பார்ப்பை நிச்சயம் நீங்கள் நிறைவேற்றுவீர்கள்.
இவ்வாறு எதியூரப்பா அதில் கூறியுள்ளார்.