”உங்கள் சண்டையில் பெற்ற குழந்தையை பந்தாடுவதா”- பெற்றோருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
டெல்லி: டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாகரத்து பெற்ற தம்பதியினரிடையேயான குழந்தை தொடர்பான வழக்கில் பெற்றோரைக் காய்ச்சி எடுத்துள்ளது நீதிமன்றம்.
4 வயதான பெண் குழந்தையின் பாதுகாப்பு தொடர்பாக விவாகரத்து ஆன தம்பதிகள் தொடர்ந்திருந்த வழக்கில் வழக்கறிகர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த நீதிபதி, "உங்கள் குழந்தை ஒன்றும் ஷட்டில் காக் அல்ல, தாயும், தந்தையும் தூக்கிப்போட்டு திருப்பி அடிப்பதற்கு" என்று நன்றாக உரைக்கும்படியான அறிவுரையும் கூறியுள்ளார்.
தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான பெஞ்ச் இந்த கசையடி தீர்ப்பினை அனைத்து பெற்றோருக்கும் மனதில் நிற்கும் வகையில் தெரிவித்துள்ளது.
அந்தத் தம்பதி சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. இதையார் பார்த்துக் கொள்வது என்பதில் பிரச்சினை ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் அக்குழந்தை நான்கு நாட்கள் தந்தையிடமும், மீதி மூன்று நாட்கள் தாயிடம் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருந்தது.
இதனை எதிர்த்து அத்தம்பதியினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், "இந்த தீர்ப்பு சரியானதல்ல. குழந்தையை இப்படி பந்தாடுவது சரியான வழிமுறையே அல்ல" என்று கூறினர்.
மேலும், குழந்தையை பந்தாட யாருக்கும் உரிமை இல்லை. அக்குழந்தை யாருடன் செல்ல விரும்புகின்றதோ அவர்களுடனேயே அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் கணவர் சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வியும், மனைவி சார்பில், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவியுமான நளினி சிதம்பரமும் வாதாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.