முதல்மரியாதை யாருக்கு?: ரோஜா எம்.எல்.ஏவிற்கு கத்திக்குத்து – சாலைமறியல்
நகரி: ஆந்திர மாநிலத்தில் கோவில் விழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நடிகை ரோஜாவை மர்மநபர் கத்தியால் கையில் வெட்டினார். இதில் ரோஜாவிற்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம் நகரியில் கங்கை அம்மனை கொண்டாடும் ஜாத்திரை திருவிழா என்ற விழா நடைபெற்றது. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த விழாவின் இறுதிநாளான நேற்று கிராம தெய்வமாக வணங்கப்படும் தேசம்மா, குண்டாலம்மா ஆகிய தெய்வங்களை வீதிஉலாவாக எடுத்து வந்தனர்.
விழாவில் நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா கலந்து கொண்டார். அவர் 500 பெண்களுடன் சீர்வரிசை தட்டு ஏந்தி கோவிலுக்கு வந்தார். இந்தவிழாவில் நகரி முன்னாள் எம்.எல்.ஏ. தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணநாயுடுவும் ஊர்வலமாக வந்தார்.
முதல் மரியாதை
அம்மன் அலங்காரம் முடிந்து ஊர்வலம் செல்ல பூஜை நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ. என்ற முறையில் முதல் மரியாதை நடிகை ரோஜாவுக்கு அளிப்பது வழக்கம். ஆனால், தெலுங்குதேசம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கிராமபெரியவருக்கு தான் முதல்மரியாதை செய்ய வேண்டும் என்று கூறி தகராறு செய்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
கத்தியால் வெட்டு
அப்போது நடிகை ரோஜா பூஜை தட்டை பூசாரியிடம் கொடுத்தார். அதனை தெலுங்குதேசம் கட்சி தொண்டர் ஒருவர் தட்டி விட்டார். மேலும் கூட்டத்தில் இருந்த மர்மநபர் ரோஜாவின் கையை கத்தியால் வெட்டினார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
சாலைமறியல்
இந்த சம்பவத்தை கண்டித்தும், பாதுகாப்பு அளிக்காத போலீசாரை கண்டித்தும் நடிகை ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கிடைத்த முதல் மரியாதை
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தி நடிகை ரோஜாவுக்கு முதல் மரியாதை அளிக்க ஏற்பாடு செய்தனர். இதனால் பரபரப்பு அடங்கியது.
தர்ணா போராட்டம்
இந்தநிலையில் ரோஜா மீதான தாக்குதலை கண்டித்து நகரி போலீஸ்நிலையம் முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.