ஆப்கன் பலாத்கார வழக்கு: ஐ.நா. மனித உரிமை ஆணைய எதிர்ப்பையும் மீறி 5 பேருக்கு தூக்கு நிறைவேற்றம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றியுள்ளனர் அதிகாரிகள்.
இவர்கள் ஐந்து பேரையும் தூக்கிலிடுவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் ஐந்து பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், போலீஸ் சீருடையில் வந்த சிலர், பக்மான் என்ற இடத்தில் வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர். அதில் ஒரு குடும்பத்தினர் இருந்தனர். அவர்களை மிரட்டி வெளியே கொண்டு வந்த அந்தக் கும்பல், அதில் இருந்த நான்கு பெண்களை கொடூரமாக பலாத்காரம் செய்தனர். அதில் ஒரு பெண் கர்ப்பிணி ஆவார். காரில் இருந்த ஆண்களை அருகில் இருந்த ஒரு இடத்தில் கட்டி வைத்து விட்டு அவர்கள் கண் முன்பாகவே இந்த அக்கிரமம் நடந்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீஸார் 7 பேரைக் கைது செய்தனர். அதில் விசாரணைக்குப் பின்னர் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த ஐந்து பேருக்குத்தான் தற்போது தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
முன்னதாக, இந்த தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஜீத் ராத் ஜீத் அல் ஹுசேன், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் ஐந்து பேர் மீதான வழக்கில் நியாயமான முறையில் விசாரணை நடைபெறவில்லை. ஐந்து பேரையும் சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளனர் என்று ஹுசேன் குற்றம் சாட்டியிருந்தார்.
இருப்பினும் இந்த ஐந்து பேரையும், காபூலுக்கு வெளியே உள்ள புல் இ சக்ரி சிறை வளாகத்தில் தூக்கிலிட்டுள்ளனர் அதிகாரிகள், கனி புதிய அதிபராக பதவியேற்ற 10 நாளில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஐந்து பேர் மீதான விசாரணை கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் முடிவடைந்தது. சில மணி நேரங்களில் இந்த விசாரணை நடந்து முடிந்தது. இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஆனால் இவர்களைத் தூக்கிலிடும் உத்தரவை முந்தைய அதிபரான ஹமீத் கர்ஸாய் செப்டம்பர் 27ம் தேதி பிறப்பித்திருந்தார். அதற்கு அடுத்த நாள் அவர் பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்த்கது.