சீனாவில் இருந்து சிரியா சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த 80 வயது தாத்தா
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் தனது குடும்பத்துடன் சீனாவில் இருந்து சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளார்.
சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் முகமது அமின்(80). அவர் தனது மனைவி, மகள் மற்றும் 4 பேரன்களுடன் சீனாவில் இருந்து கிளம்பி சிரியாவுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளார்.
இது குறித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அமின் கூறியிருப்பதாவது,
புனித பயணம்
நான் ஹிஜ்ரா(மத வழியில் பயணம்) செய்து சிரியா வந்துள்ளேன். என்னுடன் என் 4 பேரன்கள், மகள் மற்றும் மனைவியை அழைத்து வந்துள்ளேன். சிரியாவில் இருந்த என் போராளி மகன் கொல்லப்பட்ட வீடியோவை பார்த்த பிறகே இங்கு வந்துள்ளேன்.
வயதான காலத்தில்
நான் சிரியா வந்து இந்த வயதான காலத்திலும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். பயிற்சி முகாமில் நான் ஓடினேன், இளைஞர்கள் செய்தவற்றை எல்லாம் செய்தேன். முகாம் நல்லபடியாக நடந்தது என்கிறார் அமின்.
துப்பாக்கி
கருப்பு நிற உடை அணிந்திருக்கும் அமின் ஒரு கையில் ஐஎஸ்ஐஎஸ் கொடியும், மறுகையில் ஏ.கே. 47 ரக துப்பாக்கியும் வைத்துள்ளார். சீனாவில் கடந்த 60 ஆண்டுகளாக கொடுமைக்கு ஆளானதால் சிரியா வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இமாம்
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் முஸ்லீம் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர் அமின். அவர் அங்கு இமாமாக இருந்துள்ளார். சிரியாவில் பயிற்சி பெற்றுள்ளபோதிலும் அவர் போருக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டார் என்று கூறப்படுகிறது.