கருப்பா.. புஸுபுஸுனு.. நானா இப்டி பயங்கரமா இருக்கேன்.. கண்ணாடியை பார்த்து பயந்த கரடி!
கண்ணாடியை பார்த்து கரடி ஒன்று பயப்படும் வீடியோ சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது.
டெல்லி: காட்டில் வாழும் கரடி ஒன்று, கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து பயந்து போகும் வீடியோ சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது.
போக்கிரி படத்தில் வடிவேலு கண்ணாடியின் தன் முகத்தையே பார்த்துவிட்டு, 'இந்தக் கரடி பொம்மை என்ன விலை?' எனக் கேட்கும் காமெடி பிரபலமான ஒன்று. அந்தக் காமெடி அவ்வளவு பிரபலமாகக் காரணம் நம் அன்றாட வாழ்க்கையோடு ஒத்துப் போவதால்தான். காலையில் தூங்கி எழுந்ததும் கண்ணாடி பார்த்தால், நம் முகத்தைப் பார்த்து நமக்கே தூக்கிப் போடும்.
நமக்கே அப்படியென்றால், ஐந்தறிவு விலங்குகளுக்கு கண்ணாடி பார்ப்பது என்பது நிச்சயம் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கும்.

வேற லெவல்
இதனாலேயே கைக்குழந்தைகள் அல்லது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் முதன்முறையாக கண்ணாடி பார்க்கும் அனுபவங்கள் ரசிக்கும்படி இருக்கும். இணையத்தில் இது போன்ற வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொன்றுமே நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும் விதமாக சுவாரஸ்யமானதாக இருக்கும்.

கரடி வீடியோ
தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வரும் கரடி வீடியோவும் அப்படிப்பட்டதுதான். இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. ஆனால் காட்டில் எடுக்கப்பட்டுள்ள இது, பார்ப்பதற்கு வேடிக்கையாக இருப்பதால், இதனை மக்கள் நகைச்சுவையான கமெண்ட்டுகளுடன் பகிர்ந்து வருகின்றனர்.

கண்ணாடியைப் பார்த்து பயம்
இந்த வீடியோவில் கரடி ஒன்று வனப்பகுதியில் ஹாயாக நடந்து வருகிறது. அப்போது மரம் ஒன்றில் மாட்டப்பட்டிருக்கும் கண்ணாடியை எதேச்சையாக பார்க்கும் கரடி, ஒரு நிமிடம் பதறிப் போய் விடுகிறது. ஆள் அரவமற்ற அந்தக் காட்டில், ஒரு மரத்தில் திடீரென கருப்பாக, புஸுபுஸு தோற்றத்துடன் ஒரு பிம்பத்தைப் பார்த்தால் பயப்படாமல் இருக்குமா?

என்ன நினைக்கிறதோ..
சாயத் தொட்டியில் விழுந்த நரி மாதிரி, எதிரே இருப்பது ஏதோ ஒரு மிருகம் என அந்தக் கரடி நினைத்துக் கொள்கிறது போலும். இல்லை அதுவும் ஒரு கரடி தான் என அந்தக் கரடிக்கு தெரிந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை (முடிஞ்சா யாராவது அந்தக் கரடிக்கிட்ட என்ன பீல் பண்ணுச்சுனு கேட்டுச் சொல்லுங்க பாஸ்..)

சண்டைக்குத் தயார்
ஆனால் இந்த வீடியோவில் இருப்பது வீரமான கரடிதான். எதிரே ஒரு உருவத்தைப் பார்த்ததும் அது பயந்து அங்கிருந்து தப்பி ஓடவில்லை. அந்தக் கண்ணாடிக்கு பின்னாடி இருக்கும் அந்த உருவத்தை ஒரு கை பார்த்து விடுவது என உடனே மரத்திற்குப் பின்னால் ஓடுகிறது அந்தக் கரடி.

ரிப்பீட்டு
ஆனால் அங்கு யாருமில்லை.. ஏமாற்றத்துடன் முன்பக்கம் வந்தால் திரும்பவும் கண்ணாடியில் அந்த உருவம்.. இப்படியே மாநாடு படம் மாதிரி.. கண்ணாடி பார்க்க.. பின்னாடி செல்ல.. ரிப்பீட்டு.. என மரத்தை சில ரவுண்டு அடிக்கிறது அந்தக் கரடி. கடைசியில் பொறுமை இழந்து, அந்தக் கண்ணாடியைத் தூக்கிப் போட்டு உடைக்கிறது.

கமெண்ட்டுகள்
15 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ ரசிக்கும்படி உள்ளது. இந்த வீடியோவை தங்களது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், 'காலையில் எழுந்ததும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தால் என் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும்', 'நான் பேஸ்பேக் போட்டு கண்ணாடியை தாண்டிச் செல்லும் போது, இப்படித்தான் பயப்படுவேன்' என நகைச்சுவையாக தங்களது கண்ணாடி அனுபவங்களை கமெண்டுகளாகப் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications