மயிலாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஸ்ரீதேவி
சிறுவயதில் முருகனாகவும், இளம் வயதில் மயில் நாயகியாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார் அவருக்கு வயது 54.
துபாய்: பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளது திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு போனி கபூர் என்ற கணவரும், ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர்.
சிறுவயதில் முருகனாக நடித்தது முதல் இளம் வயதில் கதாநாயகியாக மயிலாக நடித்து தமிழ் திரை உலகில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். பாலிவுட் பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.
சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி
சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் - ராஜேஸ்வரித் தம்பதியின் மகளாக 1963, ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர் ஸ்ரீதேவி. கறுப்பு வெள்ளைக் காலத்தில், 4 வயதுச் சிறுமியாகத் தமிழ்க் கடவுள் முருகன் வேடத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக துணைவன் படத்தில் 1969 ஆம் ஆண்டு அறிமுகமானார்.
சிறு வயதில் விருது
ஸ்ரீதேவிக்கு மீண்டும் பல படங்களில் முருகன் வேடம் கிடைத்தாலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் விதவிதமாகக் குழந்தை கதாபாத்திரங்கள் கிடைத்தன. அவற்றில் 1971ல் மலையாளத்தில் வெளியான பூம்பட்டா என்ற படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதை 8 வயதில் வென்றார்.
இளமையான கதாநாயகி
குழந்தை நட்சத்திரமாகப் புகழ்பெற்றுவிட்டாலும் குமரியானதும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற உந்துதல் சாவித்திரியைப் பார்த்தே உருவானது எனக் கூறும் ஸ்ரீதேவி, தனது 12 வயதில், சேதுமாதவன் இந்தியில் இயக்கிய ஜூலிபடத்தில் அறிமுகமாகி, கதாநாயகியின் தங்கையாக நடித்தார்.
மூன்றாம்பிறை
இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் தனது ‘மூன்று முடிச்சு' படத்தில் ஸ்ரீதேவியை கதாநாயகியாக அறிமுப்படுத்தினார். 16 வயதினிலே மயிலாக பாரதிராஜாவால் உச்சம் பெற்றுத் தமிழ் ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்துக்கொண்டது. , மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் ஸ்ரீதேவி.
அப்பா, மகனுக்கு ஜோடி
கமல், ரஜினியோடுதான் ஸ்ரீதேவி நடிப்பார் என்ற முத்திரைக்குள் சிக்கிவிடாமல், சிவகுமார், விஜயகுமார் என அனைத்து முக்கிய நடிகர்களுடனும் நடித்தார். தலைமுறைகளைக் கடந்து கதாநாயகியாகவே மிளிந்த சாதனை ஸ்ரீதேவிக்கு மட்டுமே உரியது. தெலுங்குப் படவுலகம் கொண்டாடிய நாகேஸ்வர ராவுக்கு ஜோடியான ஸ்ரீதேவி, அவருடைய மகன் நாகார்ஜுன் ஜோடியாகவும் நடித்தார். இந்திப் படவுலகிலோ தர்மேந்திராவுடன் ஜோடி சேர்ந்தவர் , அவருடைய மகன் சன்னி தியோலுக்கும் ஜோடியாகி அசத்தினார்.
உடல் நல ஆலோசனை
திருமணம் ஆனதும் பெண்கள் உடம்பை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் கணவருக்காக, குழந்தைகளுக்காக உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் என்று கூறிவார் ஸ்ரீதேவி. 250 முறை ஸ்கிப்பிங் செய்வது. வாரத்தில் இருமுறை நீச்சல் பயிற்சி. பொரித்த உணவுகளை ஸ்ரீதேவி சாப்பிட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன.
தாய்மையின் பூரிப்பு
திரை உலகில் பிரபலமாக இருந்த போதே பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார்.
திருமண வாழ்க்கையில் சிறந்த மனைவியாக, இரு பெண் குழந்தைகளின் அர்ப்பணிப்பு மிக்க தாயாக, திரை நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரீதேவி, குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் திரையிலிருந்து விலகிய 15 ஆண்டுகளுக்குப் பின் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
என்றென்றும் இளமை
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. அவர் கடைசியாக புலி தமிழ் படத்தில் நடித்தார். தனது கணவரின் தயாரிப்பில் மாம் என்ற திரைப்படத்தில் நடித்தார் ஸ்ரீதேவி. திரைப்படத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவி பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஜனாதிபதி கையினால் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார் ஸ்ரீதேவி.
பாசிட்டிவ் எனர்ஜி
40 ஆண்டுகாலமாக ஒரு நடிகை இளமையாக இருந்தார் என்றால் அது ஸ்ரீதேவிதான். எதிர்மறையான எண்ணங்கள் எதுவும் மனதில் நுழைய அனுமதிக்கக் கூடாது. முடிந்தவரை சந்தோஷமாக இருக்கக் பழகிக்கொள்ள வேண்டும். உள்ளத்தில் சந்தோஷம் இருந்தால் முகத்தில் இளமை இருக்கும். இதுவே என் இளமையின் ரகசியம்
ஸ்ரீதேவி மரணம்
உடம்பின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வார் ஸ்ரீதேவி. இளமையோடு திகழ்ந்த ஸ்ரீதேவி மாரடைப்பில் மரணமடைந்துள்ளது திரையுலகினரை மட்டுமல்லாது திரைப்பட ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மயிலாக நடித்து சாந்தினியாக, நாகினியாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஸ்ரீதேவி சிவகாசி மத்தாப்பு போல மின்னி மறைந்து விட்டார்.