ஜப்பான் செண்டாய் அணு உலையில் பழுது - மின் உற்பத்தி நிறுத்தம்!
டோக்கியோ: ஜப்பானின் செண்டாய் அணு உலையில் ஏற்பட்டுள்ள திடீர் பழுதினால் அங்கு மின் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானில் 2011 ஆம் ஆண்டு, மார்ச் 11 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம், சுனாமி அந்த நாட்டை புரட்டிப்போட்டது. இதில் அங்குள்ள புகுஷிமா அணு உலையில் விபத்து நேரிட்டது. அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு வெளியேறியதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த விபத்தின் காரணமாக 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பானில் அணு உலைகள் மூடப்பட்டன.
ஆனால் புகுஷிமாவில் நேரிட்டதைப்போல மீண்டும் ஒரு விபத்து நேராதவண்ணம் தடுக்கிற வகையில் மிகக்கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு அங்குள்ள செண்டாய் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலை 11 ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. 25 ஆம் தேதிக்குள் முழு உற்பத்தி அளவை எட்டி விட முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த அணு உலையில் இரண்டாவது குளிரூட்டும் அமைப்பில் உள்ள குழாயில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அணுமின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.