பட்டாம்பூச்சியால் வந்த மரணம்.. ஆன்லைன் சேலஞ்ச் உயிரை எடுத்த பரிதாபம்! உஷார் இளைஞர்களே!
பிரசிலியா: ஆன்லைன் சேலஞ்சுக்காக பட்டாம்பூச்சிகளை கொன்று, அதனை தண்ணீருடன் அரைத்து ஊசியாக செலுத்திக்கொண்ட 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
பிரேசிலில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பிரேசிலின் விட்டோரியா டா கான்கிஸ்டா பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுவன் டேவிட் நூணஸ் மொரேரா. ஆன்லைனில் ஆக்டிவாக இருக்கும் டேவிட், அடிக்கடி வித்தியாசமான சேலஞ்ச்களை செய்து வந்திருக்கிறார். இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கடுமையான காய்ச்சல் அடித்திருக்கிறது. ஆரம்பத்தில் இது குறித்து வீட்டில் எதையும் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் நிலைமை மோசமடைந்ததை பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக டேவிட்டை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால் காய்ச்சல் குறையவில்லை. அடுத்தடுத்து உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கியுள்ளன. சந்தேகத்தின் பேரில் தந்தை விசாரித்திருக்கிறார். அப்போதுதான் பட்டாம்பூச்சிகளை பிடித்து நசுக்கி அதை தண்ணீர் ஊற்றி அரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்டதாக டேவிட் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து டேவிட்டை தலைமை மருத்துவமனைக்கு மாற்றியிருக்கிறார்கள்.
அங்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இறுதியாக டேவிட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த உள்ளூர் போலீசார், ஆன்லைன் சேலஞ்ச் விளையாட்டுக்காக டேவிட் விபரீத முயற்சியில் ஈடுபட்டு உயிரிழந்ததை உறுதி செய்திருக்கின்றனர். டேவிட் பயன்படுத்திய ஊசி அவரது தலையணைக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதை செய்ய சொன்னது யார் என்பது இப்போது வரை தெரியவில்லை. இது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
பட்டாம்பூச்சிகளில் பல வகைகள் இருக்கின்றன. பொதுவாக இவை விஷத்தன்மை வாய்ந்தது இல்லை என்றாலும் கூட, அவை சிக்கலான உயிரியல் அமைப்பை கொண்டிருக்கின்றன. எனவே அவை மனித உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். பட்டாம்பூச்சி நிபுணரும் சாவ் பாலோ பல்கலைக்கழகத்தின் விலங்கியல் அருங்காட்சியகத்தின் இயக்குநருமான மார்செலோ டுவர்டே இது குறித்து கூறுகையில்,
"பட்டாம்பூச்சியின் உடலில் உள்ள கெமிக்கல் திரவம் நச்சுத்தன்மை கொண்டது கிடையாது. இருப்பினும், அலர்ஜியை ஏற்படுத்தும். மட்டுமல்லாது பட்டாம்பூச்சியை அரைத்து உடலுக்குள் செலுத்திக்கொள்வதன் மூலம் அலர்ஜி பாதிப்பு தீவிரமானதாக இருக்கும். அது உயிரைக்கூட கொல்ல வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
டேவிட்டின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும், அவர் அலர்ஜியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, ஆன்லைன் சேலஞ்ச் விஷயங்களில் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications