வட கொரியா கையை "இறுக்கி பிடிக்கும்" சீனா.. ஸ்கெட்ச் ரெடி.. வெளியானது அதிகாரப்பூர்வ செய்தி
பெய்ஜிங்: உலக அமைதிக்காக என்ற பெயரில், 'வடகொரியாவுடன்' இணைந்து சீனா பணியாற்ற தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகமான KCNA தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவை எதிர்க்க ஸ்கெட்ச் ரெடியாவதாகவே இந்த நடவடிக்கை இருக்கப்போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருவதாக வடகொரியா மீது குற்றச்சாட்டுகள் குவிந்து வரும் நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா எதிர் நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. அதேபால சீனாவும், அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருப்பதால் அமெரிக்காவுக்கு எதிராக உலக நாடுகளை சீனா ஒருங்கிணைக்கின்றதா? என்று கேள்வியும் எழுந்துள்ளது.

வடகொரியா
சமீபத்தில் தென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது. போர்விமான பயிற்சிகளையும் மேற்கொண்டது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா தனது ராணுவ தளத்தை உருவாக்கவே இப்படியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்து பார்த்தது. இதை காரணமாக வைத்து, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்தது.

உலக அமைதி
இவ்வாறு இருக்கையில் உலக அமைதிக்காக 'வடகொரியாவுடன்' இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகமான KCNA தெரிவித்துள்ளதாவது, "உலக அமைதி, நீடித்த நிலையான வளர்ச்சி, இரு நாடுகளின் ஒற்றுமை மற்றும் உலக நன்மைக்காக வடகொரியாவுடன், சீனா இணைந்து பயணிக்க சீனா தயாராக இருக்கிறது. வரலாறு முன்னெப்போதும் இல்லாத வகையில் மாறி வருகிறது. எனவே வரும் காலங்களில் வடகொரியாவுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்" என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் எழுதியுள்ள கடிதத்தில் குடிப்பிடப்பட்டுள்ளதாக KCNA தெரிவித்திருக்கிறது.

கடிதம்
முன்னதாக சமீபத்தில் நடந்து முடிந்த G20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா, சீனாவிடம் இந்த ஏவுகணை சோதனை விவகாரம் குறித்து பேசியிருந்தது. மேலும், வடகொரியாவை சீனாதான் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதிபர் பைடன் வலியுறுத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் வடகொரியாவுக்கு ஆதரவாக சீனா கடிதம் எழுதியிருப்பது அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம் உலக நாடுகளை ஒன்றிணைக்க சீனா முயல்கிறதா? என்கிற சந்தேகத்தையும் அந்நாடுகள் எழுப்பி வருகின்றனர்.

நண்பேன்டா
அதேபோல ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையும் சீனா தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது. அதற்கும் முன்னதாக கடந்த மே மாதம் இதேபோல வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தீர்மானத்தைத கொண்டு வந்திருந்தது. இதனை ரஷ்யாவும், சீனாவும் சேர்ந்து தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications