பாக் ஜலசந்தி ராமர் பாலத்தில் சீனா குழு- எவ்வளவு தொலைவில் இந்தியா? சிங்கள ராணுவத்தினரிடம் விசாரிப்பு
யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கு பகுதிகளை குறிவைத்து சீனா களமிறங்கியிருக்கிறது. இலங்கைக்கான சீனா தூதர் குய் சென் ஹாங் (ட்சி சென்ஹோங்) தலைமையிலான குழு யாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது. மன்னார் வளைகுடாவில் சில மணல் திட்டுகளையும் சீனா குழு ஆராய்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
இலங்கைக்கு பெருமளவு கடன் வழங்கி அந்த நாட்டை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது சீனா. சிங்களர் பெரும்பான்மையினராக வசிக்கும் தென்னிலங்கையில் சீனாவும் தமிழர்கள் தாயக நிலப்பரப்பான வடக்கு கிழக்கில் இந்தியாவும் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்திருக்கின்றன.
வடக்கு கிழக்கில் காலூன்றுவதற்கு சீனா படுதீவிரமாக முயற்சித்து வரும் நிலையில் இந்தியா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இப்போது இலங்கையின் வடக்கு பகுதியில் பகிரங்கமாக காலூன்றும் நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ள தொடங்கி இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் சீன தூதர்.. அடுத்து துறைமுகம்தானா? இந்தியாவிற்கு எதிராக அரங்கேறும் காய் நகர்த்தல்?
தமிழர் பாரம்பரிய உடையில் சீனா குழு
இலங்கைக்கான சீனாவின் குய் சென் ஹாங் தலைமையிலான குழு யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டது. முதலில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்துக்கு சீன தூதுக் குழுவினர் சென்றனர். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் சீனா தூதுக்குழு வழிபாடு நடத்தியது. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இலங்கை-சீனாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள அரியாலை கடல் அட்டை குஞ்சுகள் இனப்பெருக்க பண்ணையை சீனா தூதுக்குழு பார்வையிட்டது. யாழ்ப்பாணம் நூலகத்தையும் சீன குழு பார்வையிட்டது. அங்கு சீன குழுவினருக்கு மாணவிகள் வரவேற்பளித்தனர்.
சீனா குழுவுக்கு உதவிய டக்ளஸ்
சீன தூதுக்குழுவினருக்கு இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழிகாட்டியாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் சமாசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீன தூதர் தலைமையிலான குழு பங்கேற்றது. யாழ்ப்பாணம் மீனவர்களுக்கு வலைகள், உலர் உணவு பெட்டகங்கள் ஆகியவற்றையும் சீன தூதுக் குழு வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சீனா தூதர் குய் சென் ஹாங், இலங்கைக்கும் சீனாவுக்கும் நீண்டகாலமாக நல்லுறவு உள்ளது. இது ஒரு தொடக்க நிகழ்வுதான். இன்னமும் ஏராளமான உதவிகளை தமிழ் மீனவர்களுக்கு வழங்க இருக்கிறோம் என்றார். மேலும் வடக்கு மாகாண ஆளுநரிடம் அனைத்து மாவட்டங்களுக்குமான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர பொறிமுறை, லேப்டாப்கள், புத்தகம் ஆகியவற்றை வழங்கியது சீன தூதுக்குழு. இந்த பயணத்தின் போது பனைமரத்தை சுட்டிக்காட்டி சீனா தூதர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சில விளக்கங்கள் கேட்டார். அதற்கு இந்த பனை மரத்தில் இருந்து கள் இறக்கலாம். இது உணவுப் பொருள். போதை தரக் கூடியது அல்ல என குறிப்பிட்டதை சீனா தூதுக் குழு நகைச்சுவையுடன் ரசித்தது.
ராமர் பாலத்தில் ஆய்வு
இதேபோல் பருத்தித்துறை கடற்பரப்புக்கு சென்று இலங்கை ராணுவ அதிகாரிகளுடன் சீன தூதுக்குழு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் போது, இங்கிருந்து இந்தியா எவ்வளவு தொலைவில் இருக்கிறது ராணுவத்தினரிடம் சீனா தூதுக்குழு கேட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு, இங்கிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்தியா இருக்கிறது என ராணுவ அதிகாரிகள் பதிலளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருந்து ட்ரோன்கள் மூலம் இந்திய பகுதியை சீன தூதுக்குழு ஆய்வு செய்ததாகவும் யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கை கடற்படை உதவியுடன் ராமர் பாலம் எனப்படுகிற ஆதம் பாலம் உள்ளிட்ட மன்னார் வளைகுடா மணல் திட்டுகளையும் (இந்தியாவுக்கு மிக அருகே உள்ளவை) சீன குழு ஆராய்ந்தது.
தமிழில் ட்வீட் போட்ட சீனா தூதரகம்
மேலும் இலங்கைக்கான சீனா தூதரகம் தமது ட்விட்டரில் பக்கத்தில் இந்த பயணம் குறித்து தமிழில் பதிவிட்டுள்ளது. அப்பதிவில், சீனத் தூதர் ட்சி சென்ஹோங் இந்து சமய மற்றும் கலாச்சார மரபுகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்று வணங்கினார். சீனத் தூதர் & மீன்வளத்துறை அமைச்சர் டிசம்பர் 16ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள குய்லான் கடல்வெள்ளரி பண்ணையை பார்வையிட்டனர். இது உள்ளூர் மீனவர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி பத்து இலட்சம் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்டி தந்துள்ளது எனக் குறிப்பிட்டு படங்களையும் வெளியிட்டுள்ளது.