தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 16 இந்தியர்கள் கப்பல் நைஜீரியாவில் சிறைபிடிப்பு- மீட்க கோரிக்கை!
அபுஜா: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 16 பேருடன் நைஜீரியா கடற்படையால் கச்சா எண்ணெய் கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கப்பலில் இருந்து 16 இந்தியர்களை பாதுகாப்ப மீட்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நார்வே நாட்டை சேர்ந்த தனியார் கப்பல் MV HEROIC IDUN. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 16 இந்தியர்கள், 8 ஈழத் தமிழர்கள் என மொத்தம் 26 பேர் பணியாளர்களாக பணிபுரிந்தனர்.

இக்கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக நைஜீரியா நாட்டுக்கு சென்றது. நைஜீரியாவை இக்கப்பல் சென்றடைந்த நிலையில் கடற்கொள்ளையர்கள், இந்தியர்களின் கப்பலை சுற்றி வளைக்க பின் தொடர்ந்தனர். இதனால் உயிர் தப்பிக்க கினியா நாட்டின் தீவு பகுதிக்குள் அக்கப்பல் நுழைந்தது. இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
தங்களது நாட்டில் அத்துமீறி கப்பல் நுழைந்ததால் 2.5 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது கினியா. இத்தொகையை கினியாவுக்கு நார்வே கப்பல் செலுத்திவிட்ட நிலையில் நைஜீரியாவிடம் அக்கப்பல் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 16 இந்தியர்கள் தற்போது நைஜீரிய கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

நைஜீரியாவோ, கச்சா எண்ணெய் திருட்டில் நார்வே கப்பல் ஈடுபட்டது; ஆகையால் அந்த கப்பல் தொடர்பாக விசாரணைகள் நடத்தி வருகிறோம் என்றது. இது தொடர்பக நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நைஜீரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 16 இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே நைஜீரியா கடற்படையிடம் சிக்கி உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நைஜீரியா கடற்படையிடம் பிரிஸ்பன் - தூத்துக்குடி, ராஜன் தீபன்பாபு- சென்னை, சுகுமார்-ராமாபுரம் ஆகியோர் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசிடம் பேச வேண்டும்; நைஜீரியாவில் தத்தளித்து வரும் இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக தாயகம் அழைத்துவர வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.













Click it and Unblock the Notifications