"சர்வாதிகாரி" ஹிட்லருடன் சேர்ந்து 10,000 பேரை கொன்ற வழக்கு.. 97 வயது மூதாட்டிக்கு சிறைத் தண்டனை
பெர்லின்: உலகையே அச்சத்தில் ஆழ்த்திய சர்வாதிகாரி ஹிட்லருடன் சேர்ந்து 10,000-க்கும் மேற்பட்டோரை கொன்ற வழக்கில் 97 வயது மூதாட்டிக்கு சிறைத்தண்டனை விதித்து ஜெர்மனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம் புரிந்து சுமார் 80 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மூதாட்டிக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
வினை விதைத்தவன் எத்தனை வருடங்கள் கடந்தாலும் அதற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த சான்றாக மாறியுள்ளது.

எமனின் தூதர் அடால்ஃப் ஹிட்லர்
1930-களின் பிற்பகுதியில் ஒரு பெயர் கிட்டத்தட்ட இந்த உலகையே நடுநடுங்க வைத்தது என்றால் அது அடால்ஃப் ஹிட்லர் என்ற பெயர்தான். ஜெர்மனியில் நாஜி கட்சியை நடத்தி வந்த ஹிட்லரின் நாடு பிடிக்கும் பேராசையே இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது என்று கூறலாம். தன்னை எதிர்ப்பவர்கள் யாரும் உயிருடனேயே இருக்கக் கூடாது என்ற கொள்கையை கொண்டிருந்த ஹிட்லர், கோடிக்கணக்கானோரை கொன்று குவித்ததாக வரலாறு கூறுகிறது. அதுவும் சாதாரணமான கொலை அல்ல. தன்னை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்கள், யூதர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரையும் கொல்வதற்காக ஆயிரக்கணக்கான சித்ரவதை முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அன்று குற்றம்.. இன்று தண்டனை..
விஷ வாயு செலுத்தி கொல்வதற்கான முகாம்கள், பட்டினி சிறை என விதிவிதமான முறைகளில் கைதிகள் கொல்லப்பட்டார்கள். தான் என்ற இறுமாப்பில் ஹிட்லர் செய்த கொடூரச் செயல்கள் அவருக்கு எதிராகவே திரும்பின. இறுதியில், எதிரிகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஹிட்லர் ஆளானார். இது ஒருபுறம் இருக்க, ஹிட்லரின் வதை முகாம்களில் அவரது கொலை பாதகங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது ஜெர்மனி அரசாங்கம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்கள் செய்த குற்றங்களின் அடிப்படையில் சில ஆண்டு சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படுகிறது. இதுவரை நூற்றுக்கணக்கானோருக்கு தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

10,500 பேரை கொன்ற மூதாட்டி
அந்த வகையில், ஹிட்லரின் நாஜி படையின் கொடூரமான வதை முகாம்களில் ஒன்றில் செயலாளராக பணிபுரிந்தவர் தாம் இர்ம்கார்ட் ஃபர்ச்சனர். தற்போது 97 வயது மூதாட்டியான இர்ம்கார்ட், வதை முகாமின் செயலாளராக 1943 முதல் 1945 வரை பணிபுரிந்தார். அப்போது அவருக்கு வயது 18. இந்த இரண்டாண்டு காலக்கட்டத்திலேயே 10,505 பேரை ஹிட்லரின் உத்தரவின் பேரில் இர்ம்கார்ட் கொலை செய்திருக்கிறார் என அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் இதற்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றன.

குற்றவாளி என தீர்ப்பு
இதனிடையே, நீதிமன்றத்தில் இர்ம்கார்டுக்கு எதிரான விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே அவர் தலைமறைவாகி விட்டார். பின்னர், கடந்த ஆண்டு அவர் ஜெர்மனி உளவுத் துறையிடம் பிடிபட்டார். இந்த வழக்கு விசாரணை இட்ஸேஹா நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், 10,500 பேரை கொலை செய்த வழக்கில் இர்ம்கார்டை குற்றவாளி என நீதிமன்றம் நேற்று அறிவித்தது. நியாயமாக, இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனைதான் விதிக்கப்படும். ஆனால், குற்றம் நடந்த போது, இர்ம்கார்டுக்கு 18 வயதே நிரம்பி இருந்ததால், சிறார் தண்டனை சட்டத்தின் கீழ் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications