கடும் பனிப் பொழிவின் பிடியில் டல்லாஸ்... ஒரே நாளில் நூற்றுக்கணக்கான கார் விபத்துகள்!
டல்லாஸ்(யு.எஸ்): இன்னும் இருபது நாட்களில் குளிர்காலம் முடியும் தருவாயில் டல்லாஸ் நகரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் சில மணி நேரங்களுக்குள் நூற்றுக்கணக்கான கார்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
அமெரிக்காவின் வட மாகாணங்களில் கடும் குளிரும், பனிப் பொழிவும் எப்போதும் நிகழும் சாதாரண விஷயம் தான். அங்கே நெடுஞ்சாலைகள், மற்றும் நகர சாலைகளில் உப்பு, மண் உள்ளிட்ட பனிப் பொழிவை சமாளிக்கும் ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கும். ஆதலால் மிக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டால் ஒழிய, போக்குவரத்து தடைபடாது, பள்ளிகளும் வழக்கம் போல் நடைபெறும்.
சென்னை மாதிரி ஊர்தான்...
தெற்கு மாகாணமான டெக்சாஸின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள டல்லாஸ், நம்ம ஊர் சென்னையைப் போல் கோடையில் சுட்டெரிக்கும். குளிர்காலமும் மிகக் கடுமையாக இருக்காது.
நகரத்தை முடக்கிய பனிப் பொழிவு
ஆண்டில் ஒரு சில நாட்கள் மட்டுமே பனிப் பொழிவு, அதுவும் குறைவான அளவிலே இருக்கும். இந்த ஆண்டு ஒரே வாரத்தில் மூன்று நாட்கள் பனிப் பொழிவு நிகழ்ந்துள்ளது. திங்கள் செவ்வாய் கிழமைகள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
500 விபத்துகள்
நேற்றைய பனிப் பொழிவினால் டல்லாஸ்- ஃபோர்ட்வொர்த் இரட்டை மாநகரப் பகுதிகள் முழுவதும் உள்ள சாலைகளில் கிட்டத்தட்ட ஐநூறு விபத்துக்கள் நடந்துள்ளன. இதுவரையிலும் இல்லாத வகையில் விபத்துக்களின் எண்ணிக்கை உள்ளது. நெடுஞ்சாலைகளில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இத்தனை விபத்துக்கள் ஏன்?
காலையில் பனிப் பொழிவு இல்லை என்பதால், அனைவரும் வழக்கம் போல் அலுவலகங்கள், பள்ளிகளுக்கு சென்று விட்டனர். 9 மணிக்கு மேல் ஏற்பட்ட பனிப் பொழிவு சாலைகளில் உள்ள பாலங்களில் பனிப் பாளங்களாக உறைய ஆரம்பித்தது. வட மாகாணங்கள் போல் உறைபனியை சரிசெய்ய உப்பு தெளிக்கும் வண்டிகள் இங்கு ஒரு சில மட்டுமே உண்டு. அவை முக்கிய சாலைகளில் மட்டுமே குறைந்த அளவில் தெளிக்கும். ஏனைய சாலைகளில் உறை பனியால் டயர்கள் வழுக்கும் போது விபத்துகள் ஏற்பட்டு விடுகின்றன.
எங்கு பார்த்தாலும் விபத்துக்கள்
பனிக்காலத்திற்கு ஏற்ற டயர்களையும் இங்கு யாரும் பொருத்துவது கிடையாது. அனேக டிரைவர்களுக்கு பனியில் வண்டி ஓட்டும் அனுபவமும் இல்லை. வளைவுகளிலும் ,சந்திப்புகளிலும் சரியாக ப்ரேக் செய்யத் தெரியாமல் தடுமாறி விபத்தை ஏற்படுத்தி விட்டனர். கூகுள் வரைபடத்தில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையும், விபத்துகளுக்குள்ளான இடங்களையும் குறியீட்டுடன் உடனுக்குடன் வெளியிட்டார்கள்.
அலுவலகத்திலிருந்து சீக்கிரம் திரும்பியவர்கள்
கடுமையான பனிப்பொழிவு பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தாலும், பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டுமே என்று அனைத்து அலுவலகங்களிலிருந்தும் மத்தியான நேரத்திலேயே திரும்ப ஆரம்பித்து விட்டனர். அது சாலை நெரிசலை இன்னும் அதிகப்படுத்தி விட்டது. ஒரு சில ட்ரைவர்களின் திறமையின்மையால் ஏற்பட்ட விபத்துக்கள் மற்றவர்களுக்கும் சிரமம் ஆகிவிட்டது.
வருகிறது ஐஸ் மழை
பனிப்பொழிவு மென்மையாக இருக்கும். குழந்தைகள் கையுறை, கோட்டு அணிந்து சென்று உற்சாகமாக விளையாடுவார்கள். சரிவான பகுதிகளில் ஸ்லெட்ஜ் வண்டி போல் செய்து சறுக்கிப் பார்ப்பார்கள். குதூகலமாக கொண்டாடுவார்கள். ஆனால் ஐஸ் போல் பெய்யும் மழையில் சாலை முழுவதும் உறைபனியாகிவிடும். நடப்பதற்கே சிரமம் என்றால், கார் டயர்கள் எம்மாத்திரம்.
புது அழகு..
ஊரெங்கும் வெண்பனி பரவிக் கிடப்பதால், முழு நிலவு போல் வெளிச்சத்துடன் புது விதமான அழகுடன் உறங்கிக் கொண்டிருக்கிறது டல்லாஸ் நகரம்.
தகவல்: தினகர்
படங்கள்: சுதீர்