என்ன அக்கிரமம்? 80 வயது மேற்பட்டோருக்கு கொரோனா சிகிச்சை அளிக்க மறுக்க திட்டமிட்டுள்ளதா இத்தாலி அரசு?
ரோம்: 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸுக்கான சிகிச்சை அளிக்க இத்தாலி அரசு மறுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் இத்தாலி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதால் தீவிர சிகிச்சை பிரிவில் இடம் இல்லாத நிலை உருவானதால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
Recommended Video
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000-த்தை தாண்டியது. உலகம் முழுவதும் விடாமல் துரத்தி வருகிறது இந்த வைரஸ்.
சீனாவில் ஜெட் வேகத்தில் பரவிய இந்த வைரஸ் அங்கு ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து வருகிறது.
368 பேர் பலி
இதன்படி தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் கொரோனாவால் 368 பேர் பலியாகிவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,747 ஆக உயர்ந்துள்ளது.
கட்டுப்பாடுகள்
இதையடுத்து இத்தாலி அரசு அந்நாட்டு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உணவு, மருந்து, பணி, மருத்துவம் ஆகியவற்றிற்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும். மற்ற எந்தவித காரணங்களுக்காகவும் தாங்கள் இருக்கும் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது என்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆவணம்
இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்டவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதி மறுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து டூரினில் உள்ள நெருக்கடி மேலாண்மைப் பிரிவு ஒரு ஆவணத்தை தயாரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பு
அதன்படி இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்டோர் அல்லது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளோருக்கு ஐசியூவில் அனுமதி மறுக்கப்படும். இத்தாலியில் தொடர்ந்து கொரோனா பரவி வருவதால் ஐசியூவில் படுக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளை காட்டிலும் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே இந்த முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இத்தாலி அரசு எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை.
வாழ்வதும் சாவதும்
எனினும் இந்த பரிந்துரையால் மருத்துவர்கள் கவலையடைந்துள்ளனர். கொரோனா மட்டுமில்லை இன்னும் பிற உடல்நிலை பாதிப்புகளுக்கு ஐசியூவில் வைத்து சிகிச்சை அளித்தால் மட்டுமே குணப்படுத்தும் நிலை உள்ள நிலையில் இது போன்ற கட்டுப்பாடுகளால் நோயாளிகளின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும் என்கின்றனர். இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில் ஒரு நோயாளி வாழ்வதும் சாவதும் அவரது வயது மற்றும் உடல்நிலையை பொறுத்தே முடிவு செய்வதாகவும் இதுவும் ஒருவிதமான போர் என்றும் தெரிவித்துள்ளார்.