ஜம்மு-காஷ்மீரை சீர்குலைக்க.. தாலிபான்களிடம் உதவி கேட்ட ஜெய்ஷ்-இ-முகமது தலைவர்?.. பரபரப்பு தகவல்!
காபூல்: இந்தியாவுக்கு ஒருபக்கம் பாகிஸ்தான் எல்லைகளை அத்துமீறியும், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்திலும் மூக்கை நுழைத்தும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது. மற்றொரு புறம் சீனாவும் எல்லையில் பிரச்சினையை கிளப்பி வருகிறது.
Recommended Video
நிலைமை இப்படி இருக்க ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு இந்தியாவுக்கு கூடுதல் அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் காலூன்றிய பிறகு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களை அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஊகங்கள் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மவுலானா மசூத் அசார் தாலிபான்ககளை சந்தித்தாக தகவல்கள் கூறுகின்றன .

மசூத் அசார் சந்திப்பு
ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் தலிபான்களின் ஆதரவை தலைவர் மவுலானா மசூத் அசார் கோரியுள்ளார். அரசியல் ஆணையத்தின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் உள்ளிட்ட தலிபான் தலைவர்களை மசூத் அசார் சந்தித்தாகவும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்காக தலிபான்களின் உதவியை அவர் நாடியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பாராட்டினார்
ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் மசூத் அசார் கந்தஹாரில் இருந்தார். ஆகஸ்ட் 15 அன்று காபூலைக் கைப்பற்றிய பிறகு தலிபான்களின் "வெற்றிக்கு" மசூத் அசார் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், "அமெரிக்க ஆதரவு பெற்ற ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின்" சரிவைச் செயல்படுத்திய பயங்கரவாதக் குழுவை பாராட்டினார். ஆகஸ்ட் 16 அன்று "மன்சில் கி தரார்" (இலக்கை நோக்கி) என்ற தலைப்பில் இவர் ஆப்கானிஸ்தானில் "முஜாஹிதீனின் வெற்றி" என்று பாராட்டியுள்ளார்.

இந்தியா உறுதி
அதே வேளையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் ஆப்கான் மண்ணை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறி இருந்தது. தாலிபான்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் எல்லையில் அதிகமாக வாலாட்டலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ''இந்தியா நிலைமையை உன்னிப்பாக கவனிக்கிறது. இந்தியா எந்தவித அச்சுறுத்தலையும் சமாளிக்கும்'' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications