அதெப்படி அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருபகுதி என்று கூறலாம்? ஜப்பான் மீது சீனா காட்டம்!!
பெய்ஜிங்: அருணாசலப் பிரதேசம் மாநிலத்தை இந்தியாவின் ஒருபகுதி என்று ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா கூறியதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசலப் பிரதேசத்துக்கு சீனா அவ்வப்போது உரிமை கொண்டாடி வருகிறது. அதாவது சீனா ஆக்கிரமித்துள்ள தெற்கு திபெத்தின் ஒருபகுதிதான் அருணாசலப் பிரதேசம் என்பது அதன் நிலைப்பாடு.
இந்த நிலையில் கடந்த வாரம் டெல்லி வந்திருந்த ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஜப்பான் தாயார்; ஆனால் அருணாசல பிரதேசத்தில் முதலீடு செய்யும் திட்டம் இல்லை.
அதேநேரத்தில் அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றே ஜப்பான் பார்க்கிறது என்று கூறியிருந்தார்.
இதற்கு தற்போது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லீய், இந்தியா-சீனா நட்புறவில் தலையிடுவதற்கு பதிலாக ஜப்பான் தனது சொந்த வேலையில் கவனம் செலுத்த வேண்டும்; சீன-இந்திய எல்லைப் பிரச்சினையை ஜப்பான் முழுமையாக புரிந்திருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம், பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்சனையை தீர்க்க இருபுறமும் எடுக்கப்படும் முயற்சியை மதிக்கவேண்டும்.; ஜப்பான் தனது கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.