விர்ர்ர்ர்ர்ரென்று 'கிராஸ்' செய்த 'பறக்கும் தட்டு'... தட்டுத் தடுமாறித் தப்பிய ஜெட் விமானம்!
லண்டன்: ஒரு பெரிய ரக்பி பந்து போல காணப்பட்ட பறக்கும் தட்டு தனது விமானத்தின் மீது மோதுவது போல வந்ததாகவும், நிமிடத்தில் சுதாரித்து தனது விமானத்தை வேறு பக்கம் திருப்பியதால் பேராபத்திலிருந்து விமானமும், பயணிகளும் தப்பியதாகவும் ஒரு விமானி கூறியுள்ளார்.
இவரது இந்த கூற்றால் லண்டன், ஹீத்ரு விமா்ன நிலைய அதிகாரிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். உண்மையில் விமானத்தின் மீது மோதுவது போல வந்தது விண்ணிலிருந்து வந்த பறக்கும் தட்டா.. அல்லது வேறு ஏதேனுமா என்ற விசாரணையில் அவர்கள் குதித்துள்ளனர்.
ஹீத்ரு விமா்ன நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏ320 ஏர்பஸ் விமானத்தின் பைலட் இங்கிலாந்து விமானத்துறை அதிகாரிகளிடம் கூறுகையில், நிச்சயம் அது எனது விமானத்தின் மீது மோதுவது போலவே வந்தது. என்னை நோக்கித்தான் அது வந்தது.
எனது விமானத்திற்கு சில அடிகள் முன்பு வரை அது நெருங்கியபோதுதான் அதைக் கவனித்தேன். உடனே சுதாரித்து விமானத்தைத் திருப்பியதால் மோதலிலிருந்து விமானம் தப்பியது என்று கூறியுள்ளார்.
ஆனால் அப்படி எந்தவொரு மர்ம விமானமும், இந்த விமானம் அருகே போனதாக தகவல் இல்லை என்று விமான நிலைய அதிகாரிகளின் விசாரணை கூறுகிறது. எந்த ஒரு மர்மப் பொருளும் விமான நிலைய கண்காணிப்பு ரேடாரில் சிக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சம்பவம் நடந்தபோது இந்த விமா்னம் தரையிலிருந்து 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமான நிலையத்திலிருந்து 32 கிலோமீட்டர் மேற்கில் அது வந்து கொண்டிருந்தது. அந்த இடம் பெர்க்ஷயர் கிராமமாகும்.
உண்மையில் வந்தது என்ன என்பது தற்போது தீவிர ஆய்வுக்குள்ளாகியுள்ளதாம்.