குவைத் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதலில் 27 பேர் பலியான வழக்கு... 7 பேருக்கு தூக்கு தண்டனை
குவைத் : ஷியா பிரிவு மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி 27 பேரை படுகொலை செய்த வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள ஷியா பிரிவினரின் இமாம் சாதிக் மசூதியில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
இதில், 2 இந்தியர்கள் உள்பட 27 பேர் உடல் சிதறி பலியாகினர். 220 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
குவைத் வரலாற்றில் மிக மோசமான தாக்குதலாக கருதப்படும் இச்சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி முகமது அல் துவாஜ், தற்கொலைப் படைத் தாக்குதலில் தொடர்புடைய 7 பேருக்கு மரண தண்டனை விதித்தார். 2 பேருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் தற்கொலைப்படை தீவிரவாதியை வழிநடத்திய முக்கிய குற்றவாளியான அப்துல்ரஹ்மான் சபா சாத், தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டான். மேலும், தொழுகை நடத்தியவர்களுக்கு காயம் ஏற்படுத்தாத வகையில் தாக்குதல் நடத்தவே திட்டமிட்டதாக அவன் கூறியுள்ளான்.
மற்றொரு தீவிரவாதி பெயர் பகாத் பராஜ் முகாரப். இவன், உள்ளூர் ஐ.எஸ். தீவிரவாத குழுவின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.