மலேசியா ஊழல் வழக்கு- மாஜி பிரதமர் நஜீப்-க்கு 12 ஆண்டு சிறை- ரூ370 கோடி அபராதம்- பிரம்படியில் விலக்கு
கோலாலம்பூர்: மலேசியாவில் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ370 கோடி (21 கோடி ரிங்கிட்) அபராதமும் விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு அளித்திருக்கிறது.
மலேசியாவில் 2009-ம் ஆண்டு முதல் 2018 -ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்தவர் நஜீப் ரசாக். மலேசியாவின் அரசு முதலீட்டு நிதி (1 MDB)யில் பல்லாயிரம் கோடி முறைகேடு உள்ளிட்ட 7 ஊழல் குற்றச்சாட்டுகள் நஜீப் ரசாக் மீது சுமத்தப்பட்டன.

இது தொடர்பான வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நஜீப் மீதான 3 மோசடி குற்றச்சாட்டுகள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஒரு குற்றச்சாட்டு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான 3 குற்றச்சாட்டு என மொத்தம் 7 குற்றச்சாட்டுகளையும் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இதனால் நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் 21 கோடி ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூ370 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தனித்தனி தண்டனை விதிக்கப்பட்டிருப்பினும் ஏக காலத்தில் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதும் தீர்ப்பு.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி முகமது நஸ்லான் முகமது இந்த தீர்ப்பை வழங்கினார். மேலும் நஜீப்பின் வயது முதுமையை சுட்டிக் காட்டி அவருக்கு பிரம்படி தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதாகவும் நீதிபதி முகமது நஸ்லான் முகமது கூறினார். மலேசியாவில் பிரதமர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதனிடையே நஜீப் ரசாக் தமக்கான தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் மனு மீதான இறுதி தீர்ப்பு வரும் வரை இந்த தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications