மாயமான மலேசிய விமானம் மலாக்கா ஜலசந்தி அருகே கடலில் விழுந்ததா?
கோலாலம்பூர்: மாயமான மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மலாக்கா ஜலசந்தி அருகே சென்றதாக மலேசிய ராணுவம் தெரிவித்துள்ளது.
227 பயணிகள் மற்றும் 12 சிப்பந்திகளுடன் மலேசியாவில் இருந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8ம் தேதி சீனாவுக்கு கிளம்பியது. அந்த விமானம் சீனா வரும் வழியில் மாயமானது.
இந்நிலையில் மாயமான விமானம் மலேசியாவில் இருந்து கிளம்பி கோட்டா பாரு நகரில் இருந்து வழியை மாற்றியுள்ளது. சீனா சென்ற விமானம் அங்கிருந்து திரும்பி மலேசியாவுக்கு வந்துள்ளது. வரும் வழியில் மலேசியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே உள்ள மலாக்கா ஜலசந்தி அருகே சென்றது ராடாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விமானம் கிளம்பிய ஒரு மணிநேரத்தில் மலேசியாவை தெற்கு வியட்நாமில் இருந்து பிரிக்கும் கடற்பகுதியில் சென்றபோது ராடாரில் இருந்து மாயமானது.
ஆனால் விமானம் எதற்காக வழக்கமாக செல்லும் வழியில் இருந்து மாறிச் சென்றது, சீனாவுக்கு சென்று ஏன் திரும்பியது என்பது தெரியவில்லை.