மாயமான விமானத்தில் வழங்கப்பட்ட மங்குஸ்தான் பழத்தில் விஷமா?: போலீஸ் விசாரணை
கோலாலம்பூர்: மலேசிய விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் விஷம் தடவப்பட்டதா என்று மலேசிய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்திய பெருங்கடலுக்குள் விழுந்ததாக கூறப்படும் மலேசிய விமானம் எம்.ஹெச்.370-ஐ தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் இந்திய பெருங்கடலுக்கு வந்துள்ளது. இதனால் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது.
முன்னதாக விமானத்தை அதன் கேப்டன் ஜஹரி அகமது ஷா தான் வேண்டும் என்றே கடலில் விட்டதாக செய்திகள் வெளியாகின. அவருக்கு இருந்த சொந்த பிரச்சனைகளால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்ய விமானத்தை கடலில் விட்டார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் பயணிகள் யாராவது விமானத்தை கடத்தி, கடலில் விட்டார்களா என்று விசாரணை நடந்தது. விசாரணையில் பயணிகளுக்கும் விமானம் மாயமானதற்கும் தொடர்பில்லை என்று மலேசிய போலீஸ் உயர் அதிகாரி காலித் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
இதனால் போலீசாரின் சந்தேகப் பார்வை விமானிகள் மற்றும் சிப்பந்திகள் மீது திரும்பியுள்ளது. மேலும் விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் விஷம் தடவப்பட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். விமானத்தில் ஏராளமான மங்குஸ்தான் பழங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அந்த பழங்களை யார் பறித்தது, பேக் செய்தது உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.