தென் இந்திய கலாச்சாரத்தை ஜப்பானில் பரப்பும் ”மாங்கா” காமிக்சின் கதாநாயகி!
டோக்கியோ: தென் இந்திய கலாச்சாரத்தினை ஜப்பான் மக்கள் விரும்பும் நிலையில் அதனை அங்கு பிரபலப்படுத்தி வருகின்றார் ஜப்பானிய பெண் ஒருவர்.
ஜப்பானில் மாங்கா காமிக்சில் நடிக்கும் நடிகையான ரிங்கோ நகாமிக்கு கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் இந்தியா மீது காதல் ஏற்பட்டது.
குறிப்பாக தென்னிந்திய கலாச்சாரம் நகாமியை மிகவும் பரவசப்படுத்தியது.
மலையாள சாமியுடன் திருமணம்:
இதன் காரணமாகவே 2004 ஆம் ஆண்டு முதல் டோக்கியோவில் கேரள பவன் என்ற உணவகத்தை நடத்திவரும் மலையாளியான கூடத்தோடி சாமியை திருமணம் செய்துகொண்டார்.
தென் இந்தியக் கலாச்சார தூதுவர்:
அதன் பின் இன்று வரை ஜப்பான் நாட்டு மக்களிடம் தென்னிந்திய கலாச்சார தூதுவராக இருந்து நமது கலாச்சாரத்தை பிரபலப்படுத்தி வருகிறார்.
தென்னிந்திய காமிக்ஸ்களின் ராணி:
அந்த வகையில் அவரது காமிக்சான "சவுத் இண்டியா ஈஸ் சோ டிலீசியஸ்" கடந்த மார்ச் 9, 2015 ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டது. இது குறித்து நகாமி கூறுகையில், தென்னிந்திய உணவின் பக்கம் ஜப்பானிய மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்பினேன். அதை தான் இந்த காமிக்சில் உருவகப்படுத்தியுள்ளேன் என்றார்.
துணை தூதரின் கருத்து:
தென்னிந்திய கலாச்சாரம் பிடித்ததால் தான் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கு ஜப்பானிய மக்களின் வருகை அதிகரித்துள்ளதாக சென்னையில் உள்ள அந்நாட்டின் துணை தூதரான கோஜி சுகியாமா கூறியுள்ளார்.
கிட்டதட்ட 1019 பேர்:
குறிப்பாக 2014 ஆம் ஆண்டில் 1019 பேர் தென்னிந்தியாவுக்கு வந்துள்ளதாக தெரிவித்த அவர், அதில் 836 பேர் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றதாக கூறினார்.
தமிழ்நாட்டில் ஜப்பான் நிறுவனங்கள்:
வியாபார விஷயமாக இங்கு வரும் ஜப்பானியர்கள் 2 அல்லது 3 வருடங்கள் வரை தென்னிந்தியாவில் தங்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1209 ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், அதில் 225 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.
சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்கள் ஜாஸ்தி:
தமிழகத்தின் அரிசி உணவுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் ஜப்பானியர்கள் தீவிர ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல விஷயங்களில் ஜப்பானுக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது.
பொங்கல் போன்ற பண்டிகை:
நாம் மார்கழி கடைசி நாளை போகியாகவும், தை முதல் நாள் பொங்கலாகவும் கொண்டாடுவது போல், ஜப்பானிலும் டோண்டோ-யாகி என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி மாத மத்தியில் கொண்டாடப்படும் இப்பண்டிகையின் போது அவர்கள் பழைய பொருட்களை தீவைத்து எரிப்பார்கள்.
கொலுவும் உண்டு:
அதே போல் நவராத்திரியில் நாம் கொலு வைப்பது போல், அங்கும் ஹினமட்சுரி என்ற பண்டிகை தினத்தில் அந்நாட்டு பெண்கள் கொலு வைக்கின்றனர். இப்படி இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் பல வகைகளில் ஒற்றுமை இருந்து வருகிறது.
அருமை புரியாத மக்கள்:
ஜப்பானிய மக்கள் நமது கலாச்சாரத்தின் அருமையை புரிந்துக்கொண்டு தமிழ்நாட்டு உணவை விரும்புகிறார்கள். ஆனால் சென்னை வாசிகளோ கரப்பான்பூச்சி செத்துகிடக்கும் பீட்சா மற்றும் பர்கர்களை நோக்கி படையெடுக்கின்றனர்.