மெக்காவில் நடந்த விபத்து கடவுளின் செயல்.. சொல்கிறார் சவுதி என்ஜீனியர்
மெக்கா: மெக்காவில் நடந்த கிரேன் விபத்து மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகும். இது கடவுளின் செயல் என சவுதி அரேபியாவைச் சேர்ந்த என்ஜீனியர் ஒருவர் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்காவில் உள்ள புனித மசூதி வளாகத்தில் கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் திடீரென உடைந்து விழுந்ததில் 2 இந்தியர்கள் உள்பட 107 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பலத்த காற்றுதான் காரணம் என்று சவுதி அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் இது கடவுளின் செயல் என்றும், மனி சக்திக்கு அப்பாற்பட்ட செயல் என்றும் ஒரு என்ஜீனியர் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிரேன் விழவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் சவுதி பின்லாடின் குழுமத்தைச் சேர்ந்த அந்த என்ஜீனியர் பெயர் குறிப்பிட விரும்பாமல் கூறுகையில், நிச்சயம் இது தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டது அல்ல. தொழில்நுட்பக் கோளாறு ஏதும் இல்லை. கிரேன் நல்ல நிலையில்தான் இருந்தது.
நடந்திருப்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. இது கடவுளின் செயல். எனக்குத் தெரிந்தவரை மனிதத் தவறு எதுவும் நடக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், யாருக்கும், எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில்தான் கிரேனை நிறுத்தியிருந்தோம். லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து செல்வதால் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதையும் மீறி விபத்து நடந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.
பெரிய மசூதி வளாகத்தில் ஒரே சமயத்தில் 20 லட்சம் பேரை அனுமதிக்கக் கூடிய வகையில் அந்த இடத்தில் விஸ்தரிப்புப் பணிகள் நடந்து வரும் சமயத்தில்தான் இப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது. இந்த சம்பவத்திற்குக் காரணம் மனிதத் தவறு அல்ல, மாறாக கடவுளின் செயல் இது என்று என்ஜீனியர் ஒருவர் கூறியிருப்பது பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications