சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கீதை மோடிக்கு பரிசு… சீன பேராசிரியர் அசத்தல்
பெய்ஜிங்: ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள சீனா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு, சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கீதை மற்றும் யோக சூத்திர நூல்களை சீனாவில் உள்ள ஜிசியாங் பல்கலைக்கழகத்தின் இயக்குநரான பேராசிரியர் வாங் சிசெங் பரிசளித்து அசத்தியுள்ளார்.
4 நாள் பயணமாக வியட்நாம் மற்றும் சீனாவிற்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். வியட்நாம் பயணத்தை முடித்துக் கொண்டு சீனா சென்றுள்ள மோடி, அங்கு ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதோடு, அந்நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதனிடையே, சீனாவில் உள்ள ஜிசியாங் பல்கலைக்கழகத்தின் இயக்குநரான பேராசிரியர் வாங் சிசெங், சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கீதை, யோக நூல்கள், யோக வசிஸ்தம், வேத நூல்கள் என 10 தொகுப்புகளை பரிசாக மோடிக்கு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்திய புனித நூல்களை பெறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், சென் சூ என்ற மற்றொரு பேராசிரியர் பிரதமர் மோடியின் உருவத்தை ஆயில் பெயிண்டிங்கில் வரைந்து மோடிக்கு பரிசாக அளித்துள்ளார்.
இந்த இரண்டு பேராசிரியர்களுக்கும் தனது நன்றியினையும் பாராட்டுக்களையும் மோடித் தெரிவித்துக் கொண்டார்.