எல்லையில் போர் பதற்றம்... ஜெர்மனியில் சீனா அதிபருடன் கை குலுக்கிய மோடி
பெர்லின்: ஜி20 நாடுகள் பங்குபெறும் உச்சிமாநாடு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் இவ்விரு தலைவர்களும், சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கென் ஷூவாங்கிடம் பத்திரிக்கையாளர்கள் நேற்று கேட்டனர். அவரோ, தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று கூறினார்.
At d BRICS leaders' informal gathering @ Hamburg hosted by China, PM @narendramodi and President Xi had a conversation on a range of issues pic.twitter.com/ervZw46PH0
— Gopal Baglay (@MEAIndia) July 7, 2017
இரு நாடுகள் நடுவே சிக்கிம் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் ராணுவம் அத்துமீறுவதாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகிறார்கள். எனவே சீன அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று ஜி20 மாநாட்டின்போது, தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற ஒரு சந்திப்பில் கை குலுக்கிக் கொண்டனர். இருவரும் புன்னகையை பரிமாறினர். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட டிவிட்டில், இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி மற்றும் ஜி ஜின்பிங் நடுவேயான பேச்சுவார்த்தை சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.