வரவர இந்த ‘குரங்கு’ச் சேட்டை தாங்கலப்பா... கென்யாவையே 3 மணி நேரம் திண்டாட வச்சிடுச்சே!
நியூயார்க்: கென்யாவில் ஒரு குரங்கு செய்த சேட்டையால் ஒட்டுமொத்த மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டு பெரும் பரபரப்பாகி விட்டது. இந்த குரங்கால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது.
கென்யாவில் உள்ளூர் நேரப்படி இன்று முற்பகல் 11.30 மணியிலிருந்து 3 மணி நேரம் மின்சாரம் இல்லை. இதனால் மக்கள் குழம்பிப் போய் விட்டனர்.
காரணம் மின்சார விநியோக மையம் ஒன்றில் உள்ள டிரான்ஸ்பர் மீது ஒரு குரங்கு விழுந்து விட்டது. இதனால் மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டு விட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கென்யா மின்வாரிய நிறுவனமான கென்ஜென் வெளியிட்ட அறிக்கையில், "முக்கியமான டிரான்ஸ்பர் மீது ஒரு குரங்கு விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்விநியோகம் நடைபெறவில்லை" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இந்த குரங்கானது மின்நிலையத்தின் மேலே ஏறி விளையாடியுள்ளது. பின்னர் முக்கியான டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மேலும் இதன் தொடர்ச்சியாக பல மின் இணைப்புகளும் துண்டிக்கப்படட்டன. மேலும் கிட்டத்தட்ட 180 மெகாவாட் மின்சாரமும் ஓவர் லோடு மூலமாக வீணாகி விட்டதாம். இதனால்தான் நாடு முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு நாடே இருளில் மூழ்கியது.
மூன்று மணி நேர இருளுக்குப் பின்னர் படிப்படியாக கென்யாவில் மின் விநியோகம் சீரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆந்திராவில் நகைக்கடை ஒன்றில் புகுந்த குரங்கு ஒன்று, அங்கிருந்த கல்லாப்பெட்டியிலிருந்து பத்தாயிரம் ரூபாயை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.