ஈராக்கில் மேலும் 231 இந்தியர்கள் சிறைபிடிப்பு?
கர்பலா: ஈராக்கில் ஆயுதம் தாங்கிய குழுவினரால் 231 இந்தியர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் அரசை எதிர்த்து சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு போர் நடத்தி வருகிறது. ஈராக்கின் பல முக்கிய நகரங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் வந்துள்ளன.
இதனால் ஈராக்கில் உள்ள 18 ஆயிரம் இந்தியர்களின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏற்கெனவே மொசூல் நகரில் 39 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் திக்ரிக் நகரில் 46 இந்திய செவிலியர்கள் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் ஷியா முஸ்லிம்களின் புனித நகரான கர்பலாவில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த 231 இந்தியர்களை ஆயுதம் தாங்கிய குழு ஒன்று சிறைபிடித்து வைத்துள்ளதாக இங்கிலாந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
கர்பலா நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இன்னும் கைப்பற்றவில்லை என்பதால் ஆயுதம் தாங்கிய குழு எது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.