கொரோனா பற்றிய உண்மை தகவலை உடனுக்கு உடன் கொடுங்க.. பிடியை இறுக்கும் WHO.. திருந்துமா சீனா?
ஜெனீவா: யார் எப்படி போனால் என்ன..என்று உலக நாடுகள் மீது எந்த ஒரு அக்கறையும் இன்றி கொரோனா பற்றிய உண்மை தகவலை வெளியிடாமல் சீனா இருந்து வருகிறது. சீனாவின் இந்த போக்குக்கு உலக நாடுகள் பலவும் விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில், கொரோனா பற்றிய தகவல்களுடன் வருமாறு சீன விஞ்ஞானிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
சீனாவில் தற்போது கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொரோனா முதன் முதலாக பரவிய போது அதை நாங்கள் பரவ விடாமல் கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லி வந்த சீனா, தற்போது பரவி வரும் ஒமிக்ரானின் மாறுபாடு அடைந்த பிஎப் 7 வகை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் நிலைகுலைந்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திவிட்டுள்ள சீனா, தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் வெளியிடப்போவது இல்லை என்று அறிவித்து இருக்கிறது.

சீனாவில் பரவும் கொரோனா தொற்று
நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கானோருக்கு சீனாவில் கொரோனா தொற்று பரவி வருவதாகவும் உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக ஒருபக்கம் செய்திகள் பரவி வந்தாலும் இதையெல்லாம் சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. உலக அளவில் கொரோனா பாதிப்புகளை பற்றிய தகவல்களை வெளியிட்டு வரும் வோர்ல்டோமீட்டர்ஸ் தரவுகளின் படி, சீனாவில் புதிதாக 7 ஆயிரம் பேருக்கும் ஒரே ஒருவர் மட்டுமே உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மைத்தகவல்களை மறைப்பது
ஆனால், சீனா தங்கள் நாட்டில் பரவும் கொரோனா பாதிப்புகள் பற்றிய உண்மைத்தகவல்களை மறைப்பது உலக அளவில் மீண்டும் புதிய வைரஸ் திரிபுகள் ஏற்பட்டு ஒரு கொரோனா அலையை ஏற்படுத்த வழிவகுப்பது போல ஆகிவிடும் என்று சர்வதேச மருத்துவ நிபுணர்களின் கவலையாக இருக்கிறது. ஆனாலும் இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத சீனா, எந்த ஒரு வெளிப்படத்தன்மையும் இன்றி இரும்புத்திரை கொண்டு மூடியது போல கொரோனா விவகாரத்தை கையாண்டு வருகிறது.

நிலவரத்தையும் தெரிவிக்க வேண்டும்
சீனாவின் இத்தகைய போக்குக்கு உலக சுகாதார நிறுவனத்திற்கும் அதிருப்தியை கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா விவகாரத்தில் கூடுதல் தகவல்கள் அவ்வப்போது உள்ள நிலவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் சீனாவை கேட்டுக்கொண்டுள்ளது. வரும் ஜனவரி 3 ஆம் தேதி சார்ஸ் - கோவ் 2 - வைரஸ் குறித்தும் அதன் தீவிரத்தன்மை போன்றவற்றை மதிப்பிடவும் உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக் குழு கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் சீன விஞ்ஞானிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உடனுக்கு உடன் தெரியப்படுத்த வேண்டும்
கொரோனாவின் திரிபுகள் உள்பட அதன் வரிசைமுறைகள் குறித்த தெளிவான தகவலை இந்தக் கூட்டத்தின் போது அளிக்க வேண்டும் என்றும் சீன விஞ்ஞானிகளுக்கு உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியாசுஸ் தனது ட்விட் பதிவில், கொரோனா குறித்த கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். சீனாவில் நிலவும் கொரோனா பாதிப்புகள் குறித்த தகவல்கள் மற்றும் உயிரிழப்புகள், எத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதன் உண்மையான நிலவரத்தை சீனா உடனுக்கு உடன் தெரியப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் நேற்று மீண்டும் வலியுறுத்தியது.

நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
இதற்கிடையே, சீனாவில் கொரோனா பரவல் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால், அமெரிக்கா, தென்கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலும் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட 'நெகட்டிவ்' சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications