பிரதமர் மோடியுடனான படங்களை உடனுக்குடன் ஷேர் செய்யாமல் வேண்டும் என்றே தவிர்த்தாரா நேபாள பிரதமர்?
காத்மாண்டு: பிரதமர் மோடியுடன் தாம் பங்கேற்ற நிகழ்ச்சிகளை ட்விட்டர் பக்கத்தில் உடனுக்குடன் பதிவிடாமல் சீனா நிறுவனம் கட்டித் தந்த விமான நிலையத் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற படங்களை மட்டுமே நேபாள பிரதமர் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. பின்னர் சில மணிநேரங்கள் கழித்தே பிரதமர் மோடியுடனான படங்களை நேபாள பிரதமர் பதவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இன்று நேபாள நாட்டின் லும்பினி நகருக்கு சென்றார். புத்தர் பிறந்த இடமான லும்பினியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் அந்நாட்டின் பிரதமர் ஷேர் பகதூர் தூபாவும் பங்கேற்றார்.
Recommended Video
லும்பினியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளின் படங்களை நமது பிரதமர் மோடி மட்டுமே தமது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் நேபாள பிரதமர் தூபா இந்த படங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடவில்லை. அதற்கு மாறாக இன்று காலை நடைபெற்ற விமான நிலைய திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற படங்களை மட்டுமே தூபா பதிவிட்டுள்ளார்.
நேபாளத்தின் விருப்பம்
பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்ற போதும் நேபாள பிரதமர் தூபா இப்படி அதிருப்தியை பொதுவெளியில் காட்டுவதற்கும் ஒரு காரணம் சுட்டிக் காட்டப்படுகிறது. இன்று காலை நேபாளர் பிரதமர் தூபா விமான நிலையம் ஒன்றை திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் லும்பினியில் இருந்து 18 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. இன்று புதியதாக திறக்கப்படுகிற விமான நிலையத்துக்கு பிரதமர் மோடியின் தனி விமானம் வந்திறங்க வேண்டும் என்பது நேபாளத்தின் விருப்பமாக இருந்ததாம். அதையே நேபாளமும் மிக ஆவலாக எதிர்பார்த்ததாம். ஆனால் இந்திய தரப்பில் இதற்கு நோ சொல்லப்பட்டதாம்.
இந்தியா நோ சொன்னது
ஏனெனில் லும்பினியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் திறந்து வைக்கப்பட்ட அந்த புதிய விமான நிலையத்தை கட்டியதே சீனா நிறுவனம் ஒன்றுதான். நேபாளத்தில் தன் கால்களை அகலப் பரப்பி வைக்கும் சீனாவின் நடவடிக்கைகளில் ஒன்றுதான் இந்த விமான நிலைய கட்டுமானம். இதனை இந்தியா தொடக்கம் முதலே விரும்பவில்லை.
லும்பினியில் மோடி
இதனையடுத்தே அண்மையில் உ.பி.யில் தாம் திறந்து வைத்த குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேராக லும்பினிக்கு சென்றார் பிரதமர் மோடி. இது நேபாள அரசு தரப்பை கடும் அதிருப்தி அடையச் செய்துவிட்டதாம். இதனை நேபாள ஊடகங்கள் விழுந்து விழுந்து சுட்டிக்காட்டி வருகின்றன.
நேபாள பிரதமர் ட்விட்டர்
இந்த பின்னணியில் சீனா நிறுவனம் கட்டிக் கொடுத்த விமான நிலைய திறப்புக்கு முக்கியத்துவம் தந்து அந்த படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார் நேபாள பிரதமர் தூபா. ஆனால் நமது பிரதமர் மோடியுடன் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் படங்களை தூபா பதிவிடாமல் புறக்கணித்து இருந்தார். பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல மணிநேரமாகியும் தூபா இந்த படங்களைப் பதிவிடாமல் இருந்ததால் விவாதமானது. பின்னர் சில மணிநேரங்கள் கழித்து பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சிப் படங்களை தூபா தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.