செவ்வாயில் குடியேற 20,000 இந்தியர்கள் விண்ணப்பம்
லண்டன்: சிவப்பு கிரகமான செவ்வாயில் நிரந்தரமாக குடியேற 20,000 இந்தியர்கள் விண்ணப்பம் தெரிவித்துள்ளனராம்.
நெதர்லாந்தைச் சேர்ந்த, ‘மார்ஸ் ஒன்' என்ற அமைப்பு செவ்வாய் கிரகத்துக்கு 2023ம் ஆண்டில் மனிதர்களை குடியேற்றப்போவதாக கூறி வருகிறது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான குடியிருப்புகளை அமைக்கப்போவதாகவும், அங்கு சென்று தங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சமீபத்தில் அது அறிவிப்பு வெளியிட்டது. இந்த விண்ணப்பத்துக்கான இறுதி நாள் நேற்றுடன் முடிந்தது.
2 லட்சம் விண்ணப்பங்கள்
செவ்வாய் கிரகத்துக்கு சென்று குடியேற உலகம் முழுவதும் இருந்து 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 140 நாடுகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளனவாம்.
அமெரிக்கர்கள்
2 லட்சம் பேரில் அதிகபட்சமாக அமெரிக்காவில் இருந்து 24 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்தியர்கள்
இந்தியாவில் இருந்து 10 சதவீதம் பேரும், சீனாவில் இருந்து 6 சதவீதம் பேரும், பிரேசிலில் இருந்து 5 சதவீதம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். அதாவது 20,000 இந்தியர்கள் செவ்வாய்க்கு பயணிக்க விண்ணப்பித்துள்ளனராம்.
கனடா - இங்கிலாந்து
இதேபோல், இங்கிலாந்து, கனடா, ரஷ்யா, மெக்சிகோ ஆகியவற்றில் இருந்து 4 சதவீதம் பேரும், பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், கொலம்பியா, அர்ஜென்டினா ஆகியவற்றில் இருந்து 2 சதவீதம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
நேர்முகத் தேர்வு
இந்த விண்ணப்பங்களில் இருந்து, வரும் 2 ஆண்டுக்குள் 3 சுற்றுகளின் கீழ் இறுதி விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் சுற்றுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர்கள் வெளியிடப்படும். அடுத்த சுற்று அடுத்த ஆண்டில் நேர்முகத் தேர்வுடன் இருக்கும்.
10 குழுக்களுக்கு பயிற்சி
2015ம் ஆண்டுக்குள் 4 பேர் அடங்கிய 6 முதல் 10 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 7 ஆண்டுகள் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும்.
2023 ல் செவ்வாய் பயணம்
2023ம் ஆண்டில் இதில் இருந்து ஒரு குழு செவ்வாய் கிரகத்துக்கு முதலில் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அங்கு தன் வாழ்நாளை கழிப்பார்கள் என மார்ஸ் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.