ஆப்கன் விவகாரம்.. வெளிநாட்டினர் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள்.. 90 நாடுகள் கூட்டறிக்கை
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தாலிபான்கள் அளித்துள்ள உத்தரவாதம் குறித்து அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 90க்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா படைகள் வெளியேறியதில் இருந்து ஆப்கன் படைகள் மீதான தாக்குதலைத் தாலிபான்கள் தொடங்கிவிட்டனர். சரியாகத் திட்டமிட்டுச் செயல்பட்டதால், வெறும் ஓரிரு வாரங்களிலேயே ஒட்டுமொத்த நாடும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது.
இதை உலக நாடுகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் ஆப்கனில் இருந்து முழுமையாக வெளியேற அமெரிக்கா உறுதியளித்திருந்த நிலையில், அதற்குள் அனைத்து வெளிநாட்டினரையும் தாயகம் அழைத்துச் செல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.

90 நாடுகள் கூட்டறிக்கை
இந்நிலையில், இந்த விஷயத்தில் தாலிபான்கள் அளித்துள்ள உத்தரவாதம் குறித்து அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 90க்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "அனைத்து வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டிற்குச் செல்ல உரியப் பயண அனுமதி வைத்துள்ள ஆப்கானிஸ்தான் குடிமகனும் நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று தாலிபான்கள் உறுதியளித்துள்ளன. எங்கள் நாட்டுக் குடிமக்களும் இத்தனை காலம் எங்களுடன் பணியாற்றிய ஆப்கன் குடிமகன்களும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக வெளியேற முடியும். இதை உறுதி செய்ய நாங்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

தொடர்ந்து நடைபெறும்
எங்களுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கன் மக்களுக்குத் தேவையான பயண ஆவணங்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும். எந்த நாடுகளுக்கு எல்லாம் செல்ல தாலிபான்கள் அனுமதி அளித்துள்ளது என்பது குறித்தும் எங்களுக்குத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தாலிபான்கள் இதுவரை அளித்த உத்தரவாதங்களின் அடிப்படையிலேயே இந்த கூட்டறிக்கை வெளியிடப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31ஆம் தேதி
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, உக்ரைன், பிரிட்டன் என 90க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த கூட்டறிக்கை அங்குள்ள வெளிநாட்டினருக்குச் சற்றே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஏனென்றால், கடந்த சில நாட்களுக்கு முன் தான், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கா வெளியேறவில்லை என்றால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தாலிபான்கள் கூறியதாகத் தகவல் வெளியானது.

தாலிபான்கள் விளக்கம்
இருப்பினும், இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்த தாலிபான்கள், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பின்னரும், மக்கள் ஆப்கனை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாகத் தாலிபான்களின் துணை இயக்குநர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோர் கவுரவமான முறையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற தேவையான ஆவணங்கள் இருந்தால் போதும், விமானச் சேவை தொடங்கியதும் அவர்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்லலாம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications