உலகக் கோப்பை.. அம்மாவின் மரணம்.. 3 திருமணம்.. பிரதமர்.. அதிர வைக்கும் இம்ரான் கானின் வாழ்க்கை!
பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க இருக்கும் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க இருக்கும் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போல வாழ்க்கையையில் கொஞ்சம் கூட தோல்வியே காணாதது இவரின் வாழ்க்கை.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்க இருக்கிறார். தற்போது இம்ரான் கானின் பிடிஐ கட்சி 113 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து, தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 272 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் தனிப்பெரும்பான்மை பெற 137 பேர் தேவை. இதனால் இம்ரான் கான் பிரதமராவது உறுதியாகியுள்ளது.

பிறப்பிலேயே
1952, அக்டோபர் 5ல் பாகிஸ்தானின் லாகூரில், பஸ்தான் குடும்பத்தில் பிறந்தவர்தான் இம்ரான் கான். பிறக்கும் போதே கோடிகளில் புரண்ட குடும்பம் அவரது குடும்பம். வியாபாரம், வர்த்தகம் என்று பல நிலைகளில் அவரது குடும்பத்திற்கு வருமானம் வந்தது. சாதாரண மக்களிடம் இருந்து விலகி மிகவும் பணக்காரராக வாழ்க்கையை தொடங்கினார் இம்ரான் கான்.

படிப்பு
சிறு வயதிலேயே ஆங்கிலம் மீது மோகம் வந்து ஆங்கில வழி கல்வியில் படித்தார். அதன்பின் இங்கிலாந்து சென்று தனியாக ஆங்கிலம் படித்தார். அதன்பின் ஆக்ஸ்போர்ட் பல்கலையின் கேபெல் கல்லூரியில் சேர்ந்து பொருளாதரம், அரசியல், தத்துவம் ஆகியவை படித்தார்.ஆனால் கிரிக்கெட்டை சிறுவயதில் விளையாடியவர், அதன்பின் விளையாடாமல் விட்டுவிட்டார்.

கிரிக்கெட் போட்டிகள்
மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பி தேசிய அணியில் தன்னுடைய திறமை மூலமும் கொஞ்சம் வீட்டு பின்புலம் மூலமும் சேர்ந்தார். 1971ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் சேர்ந்தார். கூடிய சீக்கிரத்தில் பாகிஸ்தான் அணியின் முக்கியமான ஆல்ரவுண்டராக மாறினார். 1982ல் அணியின் கேப்டனாக மாறினார். ஆனால் 1987ல் அணியில் இருந்து ஓய்வை அறிவித்து பின் ராணுவ ஜெனரலின் கோரிக்கையை அடுத்து 1988ல் மீண்டும் அணிக்கு வந்தார்.

பெரிய சாதனை
1992ல் நியூசிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானின் இளம் அணிக்கு தலைமை தாங்கி விளையாடினார் இம்ரான் கான். அப்படி இப்படி பாகிஸ்தான் அணி பவுலிங்கை வைத்துக் கொண்டு மட்டுமே இறுதி போட்டி தகுதி பெற்றது. இறுதி போட்டியில் வலுவான இங்கிலாந்தை இம்ரான் படை அடித்து ஓட விட்டு பாகிஸ்தானுக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கி கொடுத்தது. அதே கோப்பை அவருக்கு அரசியல் ஆசையை விதைத்தது.

அம்மாவை பறிகொடுத்தார்
உலகக் கோப்பை போட்டிக்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் அவர் தனது அம்மாவை பறிகொடுத்தார். கேன்சரால் இறந்த அம்மாவின் பெயரிலேயே சாஹுத் கனம் என்று புற்றுநோய் மறுவாழ்வு மையத்தை தொடங்கினார். சில வருடத்திலேயே லாகூரில் முதல் கேன்சர் மருத்துவமனையை ஏற்படுத்தினார். பின் பெஷாவரில் இரண்டாவது மருத்துவமனையை உருவாக்கினார். மக்கள் முன்னிலையில் தலைவராக மாறினார்.

சிங்கப்பாதை
அரசியல் ஆசை துளிர்விட்டு அவர் வெளிப்படையாக 1997ல் நீதிக்கான இயக்கம் என்ற பொருள்படும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை தொடங்கினார். அதன்பின் இவர் வாழ்க்கையில் எல்லாம் சிங்கப்பாதைதான். 2002 எம்.பியாக தேர்வானார். கொஞ்சம் கொஞ்சமாக இவர் கட்சியும் வளர்ந்தது. 2013 தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்து முக்கிய அரசியல் முகமாக மாறினார்,.

தோல்வியோ தோல்வி
ஆனால் 1997ல் இருந்து 2013 வரை அவரது அரசியல் பயணம் பெரிய வெற்றிப்பயணம் இல்லை என்றுதான் கூறவேண்டும். வரிசையாக தோல்வியை தழுவிக் கொண்டே வந்தார். அரசியலில் பிரபலம் ஆனாலும் எப்போதும் ஆளும் கட்சி, பூட்டோவின் எதிர்கட்சிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலேயே இருந்தது அவரது கட்சி. அவரது பிரதமர் கனவு அவரது கிரிக்கெட் பேட்டுடன் அறைக்குள் தூங்கி கொண்டு இருந்தது.

பிரதான எதிர்க்கட்சி
ஆனால் 2013 தேர்தலுக்கு பின் அவர் பின்வாங்கவில்லை. பூட்டோவின் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு தள்ளி தன்னை எதிர்க்கட்சியாக பிரகடனப்படுத்திக் கொண்டார். தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெயரை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். இதற்கு பின் பாகிஸ்தானின் உளவுப்படை ஐஎஸ்ஐயும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண வாழ்க்கை
இவரது திருமண வாழ்வும் ரோலர் கோஸ்டர்தான். 1995-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெமிலா கோல்ட்ஸ்மித் என்று தனது கல்லூரி கால காதலியை திருமணம் செய்தார். 9 வருடத்துக்குப் பின் அவரை விவாகரத்து செய்தார். அதற்கு அடுத்து ரேஹாம் கான் என்ற தொகுப்பாளரை 2015ல் மணந்தார். 10 மாதத்திலேயே அவரை விவாகரத்து செய்தார். அதன்பின் 2017 பிப்ரவரி மாதம் மூன்றாவதாக திருமணம் செய்தார். புஷ்ரா மேனகா அந்த பெண்ணுடனும் இப்போது அவர் வாழவில்லை.

வளர்ச்சி
அவரது வளர்ச்சிக்கு பின் பாகிஸ்தான் ராணுவம் முக்கிய பங்கு வகிக்கிறது. இம்ரான் கானை, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பின் குழந்தை என்று அமெரிக்கா கூறியுள்ளது. அவர் ராணுவத்தின் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தார். அதுவே அவரது தற்போதைய வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக மாறியுள்ளது.

திரைப்படம் வருகிறது
இந்த நிலையில் அவரை குறித்த திரைப்படம் ஒன்று வர இருக்கிறது. காப்டன் என்ற பெயரில் இந்த படம் வெளியாக இருக்கிறது. டிரைலர் வெளியாகி இன்னும் படம் வெளியாகாமல் இருக்கிறது. இவரின் தற்போதையை வெற்றியை கொண்டாடும் வகையில் படம் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications