இந்திய சினிமாக்களை வெளியிட புதிய கட்டுப்பாடுகள்: பாக். கோர்ட் அதிரடி!
லாகூர்: இந்திய சினிமாக்களை பாகிஸ்தானில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு முன்னாள் தயாரிப்பாளர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று புதிய கட்டுப்பாடுகள் சிலவற்றை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
சமீபத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் சினிமா தயாரிப்பாளரும், இந்திய எதிர்ப்புச் சிந்தனையாளருமான முப்ஷீர் லுக்மான் என்பவர் லாகூர் ஹைகோர்ட்டில் இந்திய சினிமாவுக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்திய சினிமாக்களை பாகிஸ்தானில் வெளியிட புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதிக வரவேற்பு....
பொதுவாக, இந்தியாவில் இந்தி சினிமாப்படங்கள் வெளியாகும் அதே நேரத்தில் பாகிஸ்தானிலும் அப்படங்கள் வெளியாவது வழக்கம். ஏனெனில், இந்திய சினிமாக்களுக்கு இஸ்லாமாபாத், லாகூரில் அதிக வரவேற்பு உள்ளது.
பாகிஸ்தான் ரசிகர்கள்....
இந்திய படங்கள் வெளியாவதால் பாகிஸ்தானிய சினிமா உலகம் பாதிக்கப் படுவதாக ஏற்கனவே அங்குள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் போர்க்கொடி ஏந்தி வருகின்றனர். பாகிஸ்தான் மக்களை திருப்தி படுத்தும் விதமாக இந்திய சினிமா கலைஞர்களைப் போன்ற சாயல் உடையவர்களை அவர்கள் தங்கள் படங்களில் பயன் படுத்தத் தொடங்கினர்.
புதிய வழக்கு....
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் சினிமா தயாரிப்பாளரும், இந்திய எதிர்ப்பு சிந்தனையாளருமான முப்ஷீர் லுக்மான் என்பவர் லாகூர் ஐகோர்ட்டில் இந்திய சினிமாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
போலி ஆவணங்கள்....
அதில் அவர் கூறியிருப்பதாவது, 'இந்தியாவில் தயாரிக்கப்படும் சினிமாப்படங்கள் இந்தியர்கள் மூலம் பாகிஸ்தானில் திரையிட சட்டப்படி அனுமதி கிடையாது. எனவே போலி ஆவணங்கள் மூலம் இந்திய சினிமாப்படங்கள் திரையிடுகிறார்கள். அதை தடுக்க வேண்டும்' என்றார்.
அனுமதிக்கக் கூடாது....
வழக்கை விசாரித்த நீதிபதி காலித் மகமூத், 'போலி சான்றிதழுடன் மற்றும் பாகிஸ்தான் அல்லது வெளிநாட்டினர் சார்பில் இல்லாத இந்திய படங்களை திரையிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதிக்க கூடாது' என உத்தரவிட்டார். அத்துடன் பாகிஸ்தான் தணிக்கைத்துறை (சென்சார் போர்டு) மற்றும் வருவாய் வாரியம் இதுபற்றி வரும் 25-ந் தேதி பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.
தடை...?
சிலநாட்களுக்கு முன்னர் இந்திய மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை கூடுதல் நேரம் ஒளிபரப்பியதாக சமீபத்தில் 10 தனியார் டி.வி.நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதித்து பாகிஸ்தான் தகவல் ஒழுங்குமுறை அதிகாரிகள் உத்தரவிட்டப்பட்ட நிலையில், தற்போது இந்திய சினிமாப்படங்களுக்கு கோர்ட்டு மூலம் தடை ஏற்படும் அச்சம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.