கனவு முடிஞ்சுபோச்சு.. உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்! ரொனால்டோ எழுதிய உள்ளம் உருக வைக்கும் பதிவு
தோஹா: கால்பந்து உலகக்கோப்பையிலிருந்து போர்ச்சுகல் அணி வெளியேறிய நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனாலாடோ தனது ரசிகர்களிடம் தனது மனநிலை குறித்து மனம் திறந்து இருக்கிறார்.
பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் சுற்றுகள் மற்றும் சூப்பர் 16 சுற்றுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது காலிறுதி போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் உலக கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, குரூப் சுற்றுகள், சூப்பர் 16 போட்டிகளில் வெற்றிபெற்று காலியுறுதிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற மொராக்கோவுக்கு எதிரான காலியுறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் போர்ச்சுகல் தோல்வியடைந்தது.

அழுத ரொனால்டோ
இதன் மூலம் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ரொனால்டோவின் கனவு தகர்ந்தது. உலகக்கோப்பை தொடரிலிருந்து போர்ச்சுகல் வெளியேறியதை ஜீரணிக்க முடியாமல் மைதானத்திலேயே ரொனால்டோ கதறி அழுதார். இதனை கண்ட அந்நாட்டு ரசிகர்களும் கண் கலங்கினர்.

பயிற்சியாளர் பெர்னாண்டோ
இந்த மொத்த கோபத்தையும் போர்ச்சுகல் பயிற்சியாளர், பெர்னாண்டோ சாண்டோஸ் மீது அவர்கள் காட்டி வருகிறார். அதற்கு காரணம், லீக் சுற்றில் தென்கொரியாவிடம் போர்ச்சுகல் தோல்வியடைந்த போட்டியில் ரொனால்டோவை பாதியில் வெளியேற்றினார். சுவிட்சர்லாந்து, மொரோக்கோவுக்கு எதிரான போட்டிகளிலும் ரொனால்டோவை பாதியில் அவர் களமிறக்கியதை விமர்சித்து வருகிறார்கள்.

ரொனால்டோ விளக்கம்
இந்த நிலையில் உலகக்கோப்பை காலிறுதியில் தோல்வியடைந்தது குறித்து ரொனால்டோ தனது பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். அதில், "போர்ச்சுகலுக்காக ஒரு உலகக் கோப்பையை வெல்வது என் வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியமாகவும் கனவாகவும் இருந்தது. நல்ல விசயமாக நான் போர்ச்சுகல் உட்பட சர்வதேச அளவிலான பல தொடர்களில் விளையாடி கோப்பைகளை வென்றேன்.

மிகப்பெரிய கனவு
ஆனால் நம் நாட்டின் பெயரை உலகின் மிக உயரமான இடத்தில் வைப்பது எனது மிகப்பெரிய கனவாக இருந்தது. எனது இந்த கனவை நனவாக்குவதற்காக நான் கடுமையாகப் போராடினேன். 16 வருடங்களில் உலகக் கோப்பைகளில் நான் விளையாடிய 5 தொடர்களில், பல கோல்களை அடித்து இருக்கிறேன்.

ரசிகர்கள் ஆதரவு
சிறந்த வீரர்களின் பக்க பலத்தோடும், லட்சக்கணக்கான போர்த்துகீசிய மக்களின் ஆதரவையும் நான் பெற்று இருக்கிறேன். அவர்களுக்காக நான் என்னுடைய அனைத்தையும் கொடுத்தேன். தற்போது அனைத்தையும் மைதானத்திலேயே விட்டுவிட்டேன். இதுவரை போராடாமல் என்னுடைய முகத்தை நான் திருப்பியது இல்லை.

சோகத்தோடு முடிந்த கனவு
எனது கனவையும் நான் கைவிட்டது இல்லை. ஆனால், நேற்று எனது கனவு சோகத்தோடு முடிவடைந்தது. இதற்கு அதிக அளவில் ஆவேசப்பட வேண்டிய அவசியம் கிடையாது. எத்தனையோ விசயங்கள் என்னை பற்றி பேசப்பட்டன. ஏராளமான விசயங்கள் எழுதப்பட்டன. பல விசயங்கள் ஊகிக்கப்பட்டு உள்ளன.

உங்களிடம் ஒன்றை சொல்ல வேண்டும்
ஆனால், போர்ச்சுகல் அணிக்கான எனது அர்ப்பணிப்பு என்பது ஒரு கணம் கூட மாறவே இல்லை என்பதை உங்களிடம் நான் தெரியப்படுத்தவும், நீங்கள் அனைவரும் இதனை அறிய வேண்டும் எனவும் விரும்புகிறேன். நான் எப்போதும் அனைத்து வீரர்களின் கோல்களுக்காகவும் போராடுபவனாகவே இருந்தேன்.

ஆலோசகராக இருக்க வேண்டிய நேரம்
அதேபோல் எனது சக வீரர்களிடம் என் நாட்டிற்காகவும் நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். இப்போதைக்கு அதிகம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. நன்றி போர்ச்சுகல். நன்றி கத்தார். உலகக்கோப்பை கனவு நீடிக்கும் போது நன்றாக இருந்தது... தற்போது, நல்ல ஆலோசகராகவும், ஒவ்வொருவரும் அவரவர் முடிவுகளை எடுக்க அனுமதிக்கும் நேரம்." என்றார்.












Click it and Unblock the Notifications