தேவைப்பட்டிருந்தால் கொன்றிருப்போம்... அலெக்ஸி நவல்னி குறித்து... விளாடிமிர் புதின் பகீர் பேச்சு!
மாஸ்கோ: ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியை நாங்கள் கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்றும் அப்படி அதனை விரும்பினால் ரஷ்யா அந்த வேலையை சிறப்பாக செய்து இருக்கும் எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சர்ச்சையாக தெரிவித்தார்.
அலெக்ஸி நவல்னிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் கொடிய விஷத்தன்மை உடைய வேதிப்பொருள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிபர் புதின் தன்னை கொலை செய்ய முயன்றதாக நவல்னி குற்றம் சாட்டினார்.
ரஷ்யாவில் விளாடிமிர் புதின் அதிபராக இருந்து வருகிறார்.எதிர்க்கட்சி தலைவராக அலெக்ஸி நவல்னி உள்ளார். இவருக்கும், அதிபர் விளாடிமிர் புதினுக்கும் சுத்தமாக ஒத்து போகவில்லை. அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அலெக்ஸி நவல்னி கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து மாஸ்கோவிற்கு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
ஒம்சக் நகரில் சிகிச்சை பெற்று அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.ஜெர்மனியின் பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அலெக்ஸி நவல்னி நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தொடர் சிகிச்சை காரணமாக கோமா நிலையில் இருந்து மீண்ட அவர் பின்னர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த கொடிய விஷ தாக்குதலுக்கு அதிபர் புதின் தான் காரணம் என நவல்னி குற்றம் சுமத்தினார். அதேபோல் சில ஐரோப்பிய நாடுகளும் புதின் மீது குற்றம் சுமத்தின. இந்நிலையில் விளாடிமிர் புதின் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் எதிர்க்கட்சி தலைவர் நவல்னி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மாஸ்கோ பேச்சு முன்... லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவம் இடையே சரமாரி துப்பாக்கிச் சூடு!
அதற்கு பதில் கூறிய புதின், அலெக்ஸி நவல்னி அமெரிக்க உளவுத்துறையுடன் தொடர்பில் உள்ளார். அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதனால் நாங்கள் தான் அவருக்கு விஷம் கொடுத்து விட்டோம் என்பது அர்த்தம் அல்ல. அவரால் யாருக்கு என்ன பயன்? ஒருவேளை எங்களுக்கு அது தேவைப்பட்டிருந்தால் (நவல்னியை கொலை செய்வது ) அந்த வேலையை சரியாக முடித்திருப்போம் என்று கூறினார்.
ஏற்கனவே அலெக்ஸி நவல்னியின் கொலை முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் புதினை குற்றம்சாட்டி வரும் நிலையில் நவல்கனி குறித்து புதின் சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளது அந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.