ஆப்கன்: சாலையோர கண்ணிவெடியில் சிக்கி 9 குழந்தைகள் பலி: 3 பேர் படுகாயம்
காபூல்: தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 9 குழந்தைகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். மேலும், படுகாயமடைந்த 3 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
வரும் 2014ம் ஆண்டோடு நேட்டோ படைகள் ஆப்கனில் இருந்து வாபஸ் பெற உள்ள நிலையில், உள்நாட்டு பாதுகாப்பை கண்காணிக்கும் பணி காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதனால், தற்போது தீவிரவாதிகளின் இலக்கு காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் மீது திரும்பியுள்ளது.
தொடர்ந்து, ராணுவம் மற்றும் காவல்துறையினரின் ரோந்து வாகனங்களை குறி வைத்து தீவிரவாதிகள் சாலையோர கண்ணி வெடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் மட்டும் இதுபோன்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி சுமார் 100 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு பக்டிகா மாகாணத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் சிலர் தவறுதலாக சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளின் மீது காலை வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த குண்டுகள் வெடிப்பில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள். மேலும், விபத்தில் சிக்கி மற்றொரு குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேபோல் ஷபுல் மாகாணத்தின் தென்பகுதியான குவாலாட்டில் மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பத்தினர், எதிர்பாராத விதமாக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி விபத்தில் சிக்கினர். இதில், சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் பலியானார்கள்.
அடுத்தடுத்து நடந்த இந்த கண்ணி வெடி விபத்தில் சிக்கி குழந்தைகள் பலியானது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.