சவுதியில் தொடர் குண்டு வெடிப்பு... மதீனா மசூதி அருகே தற்கொலைப் படை தாக்குதல்!- 4 பேர் பலி
மதீனா: சவுதி அரேபியாவில் மதீனா மசூதி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் இறுதி நாளன்று, முஸ்லிம்கள் இரண்டாவது புனித தலமாக கொண்டாடும் மதீனாவில் வெடிகுண்டு தாக்குதல் நடந்திருப்பது அங்கு பலத்த அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவங்களால், சவுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சவுதி அரேபியாவின் கடற்கரை நகரமான ஜெட்டா நகரில், அமெரிக்க தூதரகம் அமைந்து உள்ளது. இந்த தூதரகம் எதிரே மருத்துவமனை உள்ளது. அதிகாலை 2.15 மணி அளவில் இந்த பகுதிக்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் மருத்துவமனை அருகே காரை நிறுத்தினார். பின்னர் காரில் இருந்து இறங்கி தூதரகத்தை நோக்கி வேகமாக நடந்தார்.
அவரை தூதரகத்துக்குள் நுழைய விடாமல் 20 மீட்டர் தொலைவில் பாதுகாவலர்கள் 2 பேர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது திடீரென அந்த மர்ம நபர், தனது உடலில் கட்டிக்கொண்டு வந்த குண்டுகளை வெடிக்க செய்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தார். அவரிடம் விசாரணை நடத்திய தூதரக பாதுகாவலர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
குண்டுவெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் விரைந்து சென்று அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அந்த பகுதியில் சாலை உடனடியாக மூடப்பட்டது. மேலும், ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன.
அதிகாலை நேரம் என்பதால் இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதில் தங்களுடைய ஊழியர்கள் யாரும் காயம் அடையவில்லை என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்தது.
தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சில வாகனங்களின் மீதிருந்த உறையை பாதுகாப்பு படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் அகற்றினர்.அப்போது அங்கு அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. அதிர்ஷ்டவசமாக இந்த குண்டு வெடிப்பில் யாரும் காயம் அடையவில்லை.
அமெரிக்க தூதரகம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. அங்கு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து சவுதி அரேபியாவில் வசிக்கும் அமெரிக்கர்களும், அங்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4ம் தேதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2004ம் அமெரிக்க தூதகரத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 9 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, மெக்காவுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களின் இரண்டாவது புனித தலமான மதீனாவில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் தனது உடலில் பொருத்தி இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தி உள்ளார். அதுபோல, கட்டிப் நகரிலும் மற்றொரு தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி உள்ளார்.
சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள ஷியா பிரிவினரின் மசூதி அருகே, தனது உடலில் பொருத்தி இருந்த வெடிகுண்டை தீவிரவாதி வெடிக்கச் செய்திருக்கிறார். இதில் அவரது உடல் சுக்கு நூறாக சிதறியது என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்து உள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதீனா நகரில் ராணுவ தலைமையகம் அருகே உள்ள மஸ்ஜித்-இ-நப்வி எனும் இடத்தில் இரண்டாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, போர்க்களமாக காட்சியளித்தது.
இந்த தாக்குதல்களில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல்களுக்கு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் இறுதி நாளன்று, முஸ்லிம்கள் இரண்டாவது புனித தலமாக கொண்டாடும் மதீனாவில் வெடிகுண்டு தாக்குதல் நடந்திருப்பது அங்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.