தாங்க முடியாத புளுக்கம்.. வெயிலின் தாக்கத்தால் ‘பாப் ஹேர்கட்’ செய்து கொண்ட கோயில் யானை!
மன்னார்குடி கோயில் யானைக்கு பாப் கட் செய்துள்ளது இந்து அறநிலையத்துறை.
மன்னார்குடி: வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக மன்னார்குடி கோயில் யானைக்கு அறநிலையத்துறை பாப் ஹேர்கட் செய்துள்ளது.
ஏப்ரல், மே மாதம் வந்து விட்டாலே வெயிலுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறவே மக்கள் அஞ்சுகின்றனர். அந்தளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மனிதர்கள் கூட வீட்டில் பேன், ஏசி என தங்களைக் குளுமையாக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், காடுகளை, மரங்களை அழித்து வீடுகளாக்கி விட்டதால் விலங்குகளின் நிலை தான் பரிதாபம். எனவே தான் கோடை காலங்களில் வனப்பகுதிகளில் விலங்குகளுக்கு குடிநீர் தொட்டி அமைக்கப்படுகிறது. அதேபோல், வனவிலங்கு காப்பகங்களில் உள்ள விலங்குகளுக்கும் வெயிலைத் தாக்கு பிடிக்கும் வகையில் சில சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோயிலில் உள்ள செங்கமலம் என்ற பெண் யானைக்கு வெயிலையொட்டி முடி வெட்டி விட்டுள்ளனர் இந்து அறநிலையத்துறையினர்.
முன்னதாக செங்கமலத்திற்கு குளியல் போட ஷவர் அமைக்கப்பட்டது. பின்னர் தற்போது அதற்கு பாப் கட் எனப்படும் ஹேர்கட்டிங் செய்து விடப்பட்டுள்ளது. பொதுவாகவே கோயிலுக்கு வருபவர்கள் யானையை வேடிக்கைப் பார்ப்பது அதிகம். அதிலும் செங்கமலம் தற்போது ஸ்டைலாக ஹேர்கட் பண்ணிக் காட்சியளிப்பதால், அதனை வேடிக்கைப் பார்ப்பதற்கே அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications