சமூக ஒற்றுமை பெரிதும் அவசியம்: சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன்
சிங்கப்பூர்: எல்லாவற்றையும் விட சமூக ஒற்றுமைதான் மிகவும் முக்கியம், பெரிதும் அவசியம் என்று சிங்கப்பூர் நாட்டு இரண்டாம் உள்துறை மற்றும் வர்த்தக தொழில் அமைச்சரான எஸ். ஈஸ்வரன் கூறியுள்ளார்.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை 19-07-2014 அன்று சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு மற்றும் சமய இன நல்லிணக்க நிகழ்ச்சியை நடத்தியது.
சிங்கப்பூரின் ஒற்றுமை, சமய மற்றும் இன நல்லிணக்கத்தைப் பறைசாற்றிய இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பிரதம அலுவலக அமைச்சரும், இரண்டாம் உள்துறை மற்றும் வர்த்தக தொழில் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் கலந்து கொண்டார்.
"இணையத்தின் வழியாக இன்று ஏற்பட்டு வரும் தாக்கங்களையும், நம்மை எதிர்நோக்கி வருகின்ற சவால்களை சமாளிக்கவும், நாம் ஒன்றுபட்ட சமுதாயமாக சமூக ஒற்றுமையுடன் தொடர்ந்து திகழ வேண்டியது பெரிதும் அவசியம்" என்று வலியுறுத்தினார் அமைச்சர் ஈஸ்வரன்.
சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆற்றி வரும் கல்விசார்ந்த சமுதாயப்பணி மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் வர்ணித்தார்.
வரவேற்புரை வழங்கிய சங்கத்தின் தலைவர் முனைவர் கணக்காய்வாளர் முஹிய்யத்தீன் அப்துல் காதர், சிங்கப்பூரின் உற்பத்தி திறன் பெருகுவதற்கு பங்களிக்கும் வகையில், இச்சங்கம் ஆற்றிய சமூகப்பணிகளைப் பற்றி எடுத்துரைத்தார். எம்.இ.எஸ். (MES) குழுமத்தின் தலைமை நிர்வாகி எஸ். எம். அப்துல் ஜலீல், அமைச்சருக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார். சங்கத்தின் துணைத்தலைவர் கலந்தர் மொஹிதீன் நன்றி கூறினார். கணிதப் பேராசிரியர் அமானுல்லாஹ் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
சிண்டா, ஜாமியா சிங்கப்பூர், இந்திய முஸ்லிம் பேரவை மற்றும் பல சமூக அமைப்புகளிலிருந்து சமூகத் தலைவர்களும், சமூகப் பிரமுகர்களும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஒற்றுமையையும், சமய இன நல்லிணக்கத்தையும் பறைசாற்றிய வண்ணம், இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.