ஐஎஸ் தலை துண்டிப்பு வீடியோக்களை பார்த்து தாயை கொன்ற 15 வயது சிறுமி
கோபென்ஹேகன்: டென்மார்க்கில் 15 வயது சிறுமி ஆன்லைனில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளின் தலையை துண்டிக்கும் வீடியோக்களை பார்த்துவிட்டு தனது தாயை கொலை செய்துள்ளார்.
டென்மார்க்கில் உள்ள க்விஸ்ஸெலைச் சேர்ந்தவர் டைன் ரோம் ஹோல்டேகார்ட். பெயிண்ட்டரான அவர் தனது கணவர் ஜென்ஸ் மற்றும் இரட்டையர்களான மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் டைன் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கண்டுபிடித்தனர். டைன் பிணமாகக் கிடந்ததை போலீசாருக்கு அவரின் இரட்டை மகள்களில் ஒருவரான லிசா போர்ச்(15) தெரிவித்துள்ளார்.

தனது தாய் அலறும் சப்தம் கேட்டதாகவும், தங்களின் வீட்டில் இருந்து ஒரு ஆண் வெளியே ஓடுவதை பார்த்ததாகவும் லிசா போலீசாரிடம் தெரிவித்தார். விசாரணையில் டைன் இறக்க லிசா காரணம் என்று தெரிய வந்துள்ளது.
லிசா ஈராக்கைச் சேர்ந்த பக்தியார் முகமது அப்துல்லா(29) என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் லிசா அப்துல்லாவை காதலிப்பது பிடிக்காத டைன் அவரை எச்சரித்துள்ளார். இதனால் தாய்க்கும், மகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று லிசா மாலை முழுவதும் கம்ப்யூட்டரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளை தலையை துண்டிக்கும் வீடியோக்களை பார்த்துள்ளார். அதன் பிறகே தனது தாயை கொலை செய்துள்ளார். அப்துல்லாவின் கைரேகையும் டைனின் படுக்கையறையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் நடந்த பிரச்சனைகளால் லிசாவின் இரட்டை சகோதரி வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசித்து வந்தபோது தான் கொலை நடந்துள்ளது.
லிசா, அப்துல்லா ஆகிய இருவரில் யார் டைனை கத்தியால் குத்தியது என்பது சரியாகத் தெரியவில்லை. இதையடுத்து லிசாவுக்கு 9 ஆண்டு சிறை தண்டனையும், அப்துல்லாவுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை காலம் முடிந்த பிறகு அப்துல்லா நாடு கடத்தப்படுவார்.












Click it and Unblock the Notifications