பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை மாநில அரசின் உரிமை! - நீதிபதி ஏ.கே.ராசன் விளக்கம்

வாஷிங்டன்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்(யு.எஸ்): பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை குறித்து முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுக்கு மட்டுமே உண்டு. மத்திய அரசு இதில் தலையிடுவதற்கு அரசியல் சாசனத்தில் இடம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முனைவர் ஏ.கே.ராசன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் 25 ஆண்டுகளாக தமிழர் நலன்களுக்காக செயல்பட்டு வரும் உலகத் தமிழ் அமைப்பு சார்பில், தொலைபேசி வழி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நீதிபதி ஏ.கே. ராசன் கலந்து கொண்டு 'நீட் தேர்வும் மாநில உரிமைகள் பறிப்பும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

TN NEET exemption law can be won in Supreme Court

அமெரிக்கா முழுவதிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் இதில் பங்கேற்றனர். இறுதியில் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு நீதிபதி ராசன் பதிலளித்தார்.

நீதிபதி ராசன் தனது உரையில் கூறியதாவது:

மாநில பல்கலைக் கழகங்களுக்கு மாணவர் சேர்க்கை குறித்தான முடிவுகளை மாநில அரசே எடுக்க முடியும். இதில் தலையிட மத்திய அரசுக்கு உரிமையில்லை. மத்திய அரசு அப்படி தலையிடுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

இந்திய மருத்துவக் கழகத்திற்கு, மருத்துவர்களின் செயல்பாடுகளை, நடவடிக்கைகளை கண்காணிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்தான அதிகாரத்தை மத்திய அரசு 1993 ஆம் ஆண்டு வழங்கியது. இதுவும் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும்.

இந்த அதிகாரம் வழங்கப்பட்ட சட்டத்தை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவும் இல்லை. வழக்குப் போடவும் இல்லை. ஆக, மருத்துவக் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள, மாணவர் சேர்க்கைக்கான அதிகாரத்தையே, அரசியல் சாசன சட்டப்படி திரும்ப பெற முடியும். அப்படி பெறும் பட்சத்தில் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை மருத்துவக் கழகம் இந்தியாவின் எந்த பல்கலைக் கழகத்தின் மீதும் திணிக்க முடியாது.

தமிழக அரசு 'நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு இயற்றிய சட்டம்' செல்லும் என்றும் சட்டத்திற்கு உட்பட்டது என்றும், உச்சநீதிமன்றம் 2013ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்-க்கு, மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கூடுதல் மனுதாரர்கள் இணைந்து, அரசியல் சாசன சட்டப்படி, மருத்துவக் கல்லூரி சேர்க்கை பற்றிய உரிமை மாநில அரசுக்குரியது என்று வாதிட்டு வெற்றி பெறமுடியும்.

2016ம் ஆண்டு சங்கல்ப் அறக்கட்டளை, நீட் தேர்வை கட்டாயமாக்க வேண்டும் என்று நேரடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுதாரராக வழக்கு தொடர்வதற்கு, சங்கல்ப் அமைப்பிற்கு நேரடியான பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த கோணத்திலும் எதிர்தரப்பு வாதாடவில்லை. வழக்கு தொடர்வதற்கே சங்கல்ப் அமைப்பிற்கு முகாந்திரம் இல்லாத போது, அது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும்.

தற்போது நிலுவையில் இருக்கும் வழக்கில் பலரும் மனுதாரராக இணைந்து அரசியல் சாசன சட்ட வல்லுனர்களான வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடினால், மாநில உரிமையை மீட்க முடியும்.

இந்த சட்டத்தை மாற்ற, மத்திய அரசு திரும்பப் பெறுவதன் மூலமும் தீர்வு காணமுடியும். அதற்கு மாநில அரசு, தமிழக எம்பிக்கள், அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்து அரசியல் ரீதியான தீர்வும் பெறலாம்.

இவ்வாறு நீதியரசர் ஏ,கே.ராசன் கூறினார்.

உலகத் தமிழ் அமைப்பு சார்பில், தமிழர் நலன் சார்ந்த பல கருத்தரங்கள், தொலைபேசி வழி கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டு பற்றிய விழிப்புணர்வு தொலைபேசி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, கார்த்திகேய சிவசேனாபதியை அழைத்து பங்கேற்க வைத்ததும் உலகத் தமிழ் அமைப்பின் ஏற்பாடு ஆகும். அந்த கூட்டத்திற்குப் பிறகு அமெரிக்கா முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் பெரிய அளவில் பரவியதும் குறிப்பிடத் தக்கதாகும்.

உலகத் தமிழ் அமைப்பின் துணைத் தலைவர் ரவி கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார். நீதிபதி ராசனை அறிமுகப்படுத்தி வரவேற்புரையும் ஆற்றினார். அமைப்பின் தலைவர் தேவ் நன்றியுரை கூறினார்.

-இர தினகர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+