துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: டிரம்ப்
ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருப்பதன் மூலம், பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஃபுளோரிடாவில் கடந்த வாரம் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கியுடன் கூடிய ஊழியர் ஒருவர் தாக்குதலை "மிக விரைவில்" தடுக்கக் கூடும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கேட்டுக் கொண்டதையடுத்த அவர் இதனை முன்மொழிந்துள்ளார்.
"துப்பாக்கி வாங்குபவர்களின் பின்னணி தீவிரமாக ஆராயப்படும் மேலும் அவர்களின் மனநலம் குறித்தும் கண்டறியப்படும்" என பள்ளி மாணவர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த டிரம்ப் இதனை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்:
அமெரிக்கா: பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி
ஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு: குற்றம் சுமத்தப்பட்டவர் குறித்து முன்பே எச்சரிக்கை
மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது தான் வகுப்பறையில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுவதை டிரம்ப் மறுத்துள்ளார்.
மேலும் பள்ளியில் தாங்கள் பாதுகாப்பாக உணர விரும்புவதாக மாணவர்கள், டிரம்பிடம் கூறினர்.
மாணவர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தனது மகளை இழந்த தந்தை ஒருவர் தெரிவித்தார். அரசியல்வாதிகள் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தொடர்புடைய செய்தி:
ஒரு வகை இயந்திர துப்பாக்கிக்கு அமெரிக்காவில் தடை?
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'பம்ப்ஸ்டாக்' இயந்திரத்திற்கு தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
பாதி தானியங்கி துப்பாக்கிகளை, இயந்திர துப்பாக்கியாக மாற்றி அமைக்க உதவும் ஓர் உதிரிபாகம்தான் பம்ப்ஸ்டாக்.