லெபனானில் தற்கொலைப் படை தாக்குதல்: 37 பேர் பலி; 12 பேர் படுகாயம்
பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று மாலை நடந்த இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 37 பேர் பலியாகியுள்ளனர். 12க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். இந்த போரில் இதுவரை சுமார் 70 ஆயிரம் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது. உயிருக்கு பயந்த லட்சக்கணக்கான மக்கள் லெபனான், ஈராக் உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், செஞ்சிலுவை சங்கத்தின் அகதிகள் முகாம் உள்ள பவ்ரஜ்-அல்-பராஜ்னே நகரில் பொதுமக்கள் அதிகம் உள்ள இடத்தில் திடீரென தாக்குதல் நடைபெற்றுள்ளது. முதல் தாக்குதல் நடைபெற்ற 5 நிமிடத்திற்குள் 150 மீட்டர் தொலைவில் மற்றொரு தற்கொலை தீவிரவாதி தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.