ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பிடிக்க போராடிய தாலிபான்கள் முயற்சி தோல்வி!
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராவதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிடலாம் என்ற தாலிபான்கள் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. ஐ.நா. சபையில் ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளை சேர்த்துக் கொள்வதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் சர்வதேசத்தின் ஆதரவைப் பெறுவதில் படு தீவிரமாக இருக்கின்றனர். அதேநேரத்தில் பெண்களுக்கான உரிமைகளை மறுப்பது, முன்னாள் ஆப்கானிஸ்தான் படை வீரர்களை படுகொலை செய்வது என்கிற தாலிபான்களின் நரவேட்டை தொடரவும் செய்கிறது.
தாலிபான்களின் முயற்சி
கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க தாலிபான்கள் மும்முரமாக முயற்சிகளை மேற்கொண்டனர். ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தான் பிரதிநிதியாக முஹம்மது சுகைல் ஷாகீன் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெசுக்கு ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாகி கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் ஐ.நா. சபை, தாலிபான்கள் பிரதிநிதியை அங்கீகரிக்கவில்லை.
அங்கீகாரம் கிடைக்கவில்லை
இருந்தாலும் ஐ.நா. சபையின் அங்கீகாரத்துக்காக தாலிபான்கள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். இந்த நிலையில் ஐ.நா.சபையில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான அங்கீகாரம் வழங்கும் குழுவின் கூட்டம் புதன்கிழமையன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் 192 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா.சபையில் ஆப்கானிஸ்தானை சேர்ப்பதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் தாலிபான்களின் சர்வதேச அங்கீகாரம் பெறும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
ஈரானுடன் மோதிய தாலிபான்கள்
முன்னதாக அண்டை நாடான ஈரானுடன் தாலிபான்கள் மோதினர். ஈரான் விவசாயிகள் எல்லை கடந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதாக நினைத்து தாலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான் ராணுவத்தினர் பதிலுக்கு தாலிபான்கள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஆப்கானிஸ்தான்-ஈரான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் தவறான புரிதலால் மோதல் நிகழ்ந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆப்கான் போல மியான்மர்
ஆப்கானிஸ்தானைப் போலவே ஐ.நா.வின் அங்கீகாரத்தைப் பெறும் மியான்மர் நாட்டின் முயற்சியும் தோல்வி அடைந்தது. மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது ஆங் சான் சூச்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். மியான்மரில் ஜனநாயகம் முழுமையாக முடக்கப்பட்டு ராணுவாத்தின் கை ஓங்கி இருக்கிறது. ஈவிரக்கமற்ற படுகொலைகளை அந்நாட்டு ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய காரணங்களால் ஆப்கானிஸ்தானைப் போல மியான்மர் நாட்டையும் அங்கீகரிக்க ஐ.நா.சபையில் உறுப்பினர்களுக்கான அங்கீகாரம் வழங்கும் குழு மறுத்துவிட்டது.