ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர துருக்கி கிளம்பிய அமெரிக்கர் சிகாகோவில் கைது
சிகாகோ: ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர சென்ற அமெரிக்கர் சிகாகோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரைச் சேர்ந்தவர் முகமது ஹம்சா கான்(19). அவர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர முடிவு செய்தார். இதையடுத்து அவர் துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லுக்கு செல்ல கடந்த மாதம் 26ம் தேதி விமான டிக்கெட் எடுத்தார். அவர் முதலில் ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா நகருக்கு சென்று அங்கிருந்து இஸ்தான்புல் செல்லவிருந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வியன்னா செல்ல சிகாகோவில் உள்ள ஓ ஹேர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை எப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அதிகாரிகள் அவரிடம் விமான நிலையத்தில் வைத்தே விசாரணை நடத்தினர். பின்னர் அவரது வீட்டை சோதனை செய்ததில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து கையால் எழுதப்பட்ட பல ஆவணங்கள் சிக்கின.
கைது செய்யப்பட்ட கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதிகபட்சமாக 15 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.