4 ஆப்பிரிக்க போராளிகளைப் பிடிக்க உதவினால் ரூ 107 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன்: தேடப்பட்டு வரும் நான்கு முக்கிய ஆப்பிரிக்க போராளிகளைப் பிடிக்க உதவுபவர்களுக்கு 18 மில்லியன் டாலர் சன்மானம் அளிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ 107 கோடியே 42 லட்சத்து நாற்பதாயிரம் ஆகும்.
வெளிநாட்டவர்களைக் கடத்துவது மற்றும் மேற்கத்திய இலக்குகளைத் தாக்குவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் நான்கு ஆப்பிரிக்க போராளிகளை அமெரிக்கா தீவிரமாகத் தேடி வருகிறது.
ஆனபோதும், அமெரிக்க அரசுக்கு போக்கு காட்டி அப்போராளிகள் மறைந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே, தலைமறைவாக உள்ள அந்த நான்கு போராளிகளைக் குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அமெரிக்கா. அதில், நைஜீரியா நாட்டில் செயல்பட்டுவரும் போகொஹாரம் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைக் கண்டுபிடிக்க 5 மில்லியன் டாலர் பரிசு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் மகரெப் பகுதியை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மேற்கு ஆப்பிரிக்காவின் ஜிஹாத் மற்றும் ஒற்றுமை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்கள் இரண்டு பேர் பற்றித் துப்புத் தெரிவிப்போருக்கு தலா 5 மில்லியன் டாலர் வெகுமதி தரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மீதமுள்ள மூன்று மில்லியன் அமெரிக்காவிற்கு எதிராகத் திட்டமிடும் எகிப்திய தீவிரவாதி ஒருவர் குறித்து தகவல் அளிப்போருக்கு வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications