பாகிஸ்தான் அரசியலில் நெருக்கடி... அடுத்த பிரதமராகிறார் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசீப்?
பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் அடுத்த பிரதமாவார் என்று கணிக்கப்படுகிறது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் அடுத்த பிரதமராக அந்த நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பொறுப்பேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்கள் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ரகசியமாக முதலீடு செய்திருப்பதாக பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதி ஆசிப் சையீத் கோஷா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யவும் நவாஸ் ஷெரீப்பைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக 1990 - 1993, 1997 - 1999 ஆகிய காலக்கட்டங்களில் நவாஸ் ஷெரீப் இருந்தபோது அவரும் அவரது குடும்பத்தினரும் லண்டனில் சொத்துக்கள் வாங்கியிருப்பது பனாமா ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இடைக்கால பிரதமராக தற்போதைய ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தத் தகவல்களை கவாஜா மறுத்துள்ளார். பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி முழு ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பியும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஷ் ஷெரிப் பிரதமராக பதவியேற்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி இது குறித்து இத வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.